தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளார் சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், `என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டது. இதனால் அவருடைய பிரசவ காலத்தில் அவருடன் துணையாக இருப்பதற்கு மே மாதம் முதல், 90 நாள்கள் விடுமுறை அளிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்திருந்தேன்.
முதலில் அதை ஏற்ற அதிகாரிகள் எனக்கு விடுப்பு வழங்கினர். ஆனால் அடுத்த சில நாள்களில் கடையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக எனக்கு வழங்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்தனர்.
இதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். என் வழக்கை விசாரித்த நீதிபதிகள், எனக்கு விடுமுறை அளிக்க பரிசீலிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து மே 1-ம் தேதி முதல் 30 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள எனக்கு அனுமதி வழங்கப்பட்டது ஆனால் என் மனைவிக்கு மே 31-ம் தேதி குழந்தை பிறந்தது.
இதனால் அன்று என்னால் பணிக்குத் திரும்ப முடியவில்லை. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பினேன். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள், நான் காவல்துறை சட்டவிதிகளை மீறிவிட்டதாகவும் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எனக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனர். இந்த அழைப்பாணையை ரத்து செய்ய வேண்டும்’ என அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி, `நீதி சாஸ்திரத்தில் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது துணையாக இருப்பவர், அறிவு அளிப்பவர், உணவு வழங்குபவர், பயத்தில் இருப்பவர்களைப் பாதுகாப்பவர் ஆகிய அனைவருமே தந்தையாகக் கருதப்படுகிறார்கள்.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக மனைவியின் மகபேறு காலத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது. குழந்தை பிறக்கும் போது தாய், தந்தை இருவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்பது பல நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.
இந்தியாவில் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, குழந்தை பெறும்போது தந்தையருக்கு விடுப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால் Central Civil Services (Leave) Rules, 1972-ல் மகபேறு காலத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது, ஆனால் தமிழ்நாடு உள்பட இது எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை.
மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனி சட்டம் உருவாக்கப்படுவது அவசியமாக உள்ளது, இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பொறுப்புள்ள தந்தையாகச் செயல்பட்டுள்ளார். அதனால் அவருக்கு விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட அழைப்பாணை ரத்து செய்யப்படுகிறது, மேலும் அவர் கடையம் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாகப் பணியில் சேர உத்தரவிடப்படுகிறது’ என தீர்ப்பளித்துள்ளார். மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.