மகன் பிரக்ஞானந்தாவின் வெற்றியைத் தூரம் நின்று ரசிக்கிற தாய் நாகலட்சுமியின் புன்னகை, காண்போரை நெகிழச் செய்து வருகிறது.
அஜர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக் கோப்பை தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகத் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானாவை அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதியாகியுள்ளார். இறுதிச்சுற்றில் இவர் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து தற்போது ஆடிவருகிறார்.
இந்நிலையில் இறுதிச்சுற்றுக்குத் தகுதியான தன் மகனின் வெற்றியையும், அவர் மகிழ்ச்சியுடன் பேட்டியளிப்பதையும் பார்த்து அவரது தாய் நாகலட்சுமி பூரிப்புடன் புன்னகைத்த வண்ணம் இருக்கும் புகைப்படம் காண்போரை நெகிழச் செய்து வருகிறது.
பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியையும், அவரது தாயின் புன்னகை குறித்தும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், “உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்னும் வரலாற்றைப் படைத்துள்ளீர்கள். செஸ் போர்ட் தயாராக உள்ளது, உங்களின் ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. இந்தியா உங்களுக்குத் துணை நிற்கிறது” என்று பிரக்ஞானந்தாவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரபல ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான கேரி காஸ்பரோவ், “பிரக்ஞானந்தாவிற்கும், அவரது தாய்க்கும் என் வாழ்த்துகள். என்னுடைய ஒவ்வொரு போட்டியிலும் என் அம்மா என்னுடன் கூடவே இருந்து எனக்குப் பெரும் பலமாக இருந்துள்ளார். தாய் நம்முடன் இருப்பது நமக்குத் தனி பலம். சென்னை இந்தியன் இரண்டு நியூயார்க் கௌபாய்களை வீழ்த்தியுள்ளார். பிரக்ஞானந்தா கடினமாக நிலைகளிலும் மன உறுதியுடன் போராடுகிறார்” என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று 4.30 மணிக்குத் தொடங்கி தற்போது நடைபெற்றுவரும் இறுதிச்சுற்றில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வென்று உலகக் கோப்பையை வென்று வர யங் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியா சார்பாக வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.