ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் ஆகஸ்ட 3-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா என 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று ஆடி வருகின்றன.
இந்நிலையில், நேற்று அத்தனை அணிகளின் கேப்டன்களும் தமிழர்களின் பாரம்பரியமான வேஷ்டி சட்டை அணிந்து விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றிருந்தது.
இந்தத் தொடரின் லீக் சுற்றில் அத்தனை அணிகளும் 5 போட்டிகளில் ஆட வேண்டும். இப்போது வரை அணிகள் 4 போட்டிகளில் ஆடி முடித்திருக்கின்றனர். அத்தனை அணிகளுக்கும் இன்னும் 1 லீக் போட்டி மட்டும் மீதமிருக்கிறது. அந்தப் போட்டி ஆகஸ்ட் 9-ம் தேதியான இன்று நடைபெறுகிறது. நேற்று எந்தப் போட்டிகளும் இல்லை. அணிகளுக்கு நேற்றைய நாள் ஓய்வு நாளாகவே அமைந்தது. இந்நிலையில்தான், போட்டோஷூட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு மாலை 6:15 மணிக்கு முடிய, அத்தனை கேப்டன்களும் போட்டோஷூட்டிற்குத் தயாராகி வேஷ்டி சட்டையுடன் ராதாகிருஷ்ணன் மைதானத்தின் கீழ் தளத்தில் உள்ள விஐபி அறையில் காத்திருந்தனர். விளையாட்டுத்துறையின் செயாலளர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, மேகநாத் ரெட்டி மற்றும் ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட வேஷ்டி சட்டையிலேயே வந்திருந்தனர்.
இரவு 7:30 மணிக்கு மேலாக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் வேஷ்டி சட்டையோடு மைதானத்திற்கு வந்து இறங்கினார். வேஷ்டி சட்டையில் நின்ற அத்தனை கேப்டன்களுக்கும் கை குலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“மலேசியாவின் பாரம்பரிய உடையுமே ஏறக்குறைய வேஷ்டி போலத்தான் இருக்கும்…” என அதிகாரிகள் சொல்ல, வியப்பாக கேட்டுக்கொண்ட உதயநிதி மலேசிய கேப்டனிடம் அவர்களின் உடை பற்றி சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
இதெல்லாம் முடிந்த பிறகு போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அத்தனை பேரும் சென்று வெற்றிக்கோப்பையுடன் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், கேப்டன்களுடன் அமர்ந்து சிற்றுண்டி அருந்திவிட்டு உதயநிதி விடைபெற்றார்.
இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் உமர் ஆகியோர் வேஷ்டி அணிந்திருப்பது நன்றாக இருப்பதாக `Very Good’ எனக்கூறி தம்ப்ஸ் அப் காட்டிச் சென்றனர்.