வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது, சாதி , மதம் பேதமின்றி அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்தது ஆடிப்பெருக்கு. ஆடியில் பொங்கி வரும் காவேரி நம் வாழ்வை வளப்படுத்தும் அன்னையாக இருக்கிறாள். அந்த அன்னைக்கு நாம் அனைவரும் குடும்பத்தோடு சென்று மரியாதை செலுத்தும் தினம்தான் ‘ஆடிப்பெருக்கு’ . நம்மை பெற்ற தாயையும் வளர்த்தவள் அவள் தான். அன்னைக்கும் அன்னையாக இருப்பவள்.
ஆடிப்பெருக்கின் சிறப்புகளை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பாடியுள்ளார்.
உழவர் ஓதை, மதகு ஓதை
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி…
பொங்கி வரும் புது வெள்ளம் கண்டு உழவர்கள் ஆரவாரத்தோடு ஏர் பூட்டி உழும் ஓசை, கரைகளையும் வரப்புகளையும் உடைத்துக் கொண்டு ஓடும் நீரின் ஓசை, மதகு வழியாக நீர் ஓடும் ஓசை, புதுப்புனல் விழாவை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடும் ஓசை…இவையனைத்தும் ஒருசேர நடந்து செல்பவள் நீ…வாழிய காவிரியே…என்பதே அப்பாடலின் விளக்கம்.
இதிலிருக்கும் “நடந்தாய் வாழி காவேரி” என்ற வரியை எடுத்து கவியரசர் அகத்தியர் படத்தில் “நடந்தாய் வாழி காவேரி.. நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க நடந்தாய் வாழி காவேரி…” என்று பாடினார்.
மேலும் வந்தியத்தேவனோடு பயணித்து சோழ நாட்டில் ஆடிப்பெருக்கு எப்படி கொண்டாடப்பட்டது என்பதை கண்டுகளித்திருக்கிறோம்.
ஆடிப்பெருக்கில் தொடங்கும் பொன்னியின் செல்வன் வரலாற்றுத் தொடர் ஒவ்வொரு ஆடிப்பெருக்கின் போதும் தொடரைப் படித்த அனைவரையும் சுமார் 1000 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று அன்றைய தினத்தை சோழநாட்டில் கொண்டாடி மகிழ வைத்து பின் அவரவர் இல்லத்தில் திரும்ப விட்டுச் செல்லும்.
அந்த அளவுக்கு வாசகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார் கல்கி.
ஆடிப்பெருக்கு அன்று உற்சாகம் பொங்கி வழியும். பெண்கள் கூட்டம் கூட்டமாக ஆற்றங்கரைக்கு சென்று காவிரி அன்னைக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவையாறு புஷ்ப மண்டபம் படித்துறை, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை ஆகிய இடங்களில் புதுமணத் தம்பதிகளால் நிறைந்திருக்கும்.
அன்றுதான் தாலி பெருக்கி கொள்வார்கள்.திருச்சியில் தொடங்கி பூம்புகார் வரையில் மங்களகரமாக இருக்கும். காண கண்கோடி வேண்டும் என்று சொல்வார்களே அது இந்த பண்டிகைக்கு மட்டும் பொருந்தும்.
நதிகளை நம் அன்னையாக போற்றி வழிபட இலக்கியங்கள் மற்றும் வரலாற்று காவியங்கள் கற்றுக்கொடுத்து உள்ளன. அலுவலகம் செல்ல ரயிலை பிடிக்கும் அவசரத்தில் செல்பவர்கள் நிலையத்தில் உள்ள பிள்ளையாருக்கு அவசர அவசரமாக தோப்புக்கரணம் போட்டு செல்வது போல இவ்விழாவை கொண்டாடக்கூடாது. நின்று நிதானமாக குடும்பத்தோடு அனைவரும் இணைந்து வழிபட வேண்டும்.அதுதான் அந்த அன்னைக்கு நாம் செய்யும் மரியாதை.
அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே. பள்ளிகள் மட்டுமல்ல அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விட வேண்டும். பொங்கல், தீபாவளி போல ஆடிப்பெருக்கும் குடும்பத்தோடு கொண்டாடப்பட வேண்டிய விழா எனவே தமிழக அரசு ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாட அடுத்த ஆண்டு முதல் அரசு விடுமுறை விட வேண்டும்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.