சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா என 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றிருக்கின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான முகமது சக்லைன் சென்னையைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
பாகிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியில் மலேசியாவிற்கு எதிராக 1-3 எனத் தோற்றிருந்தது. இந்நிலையில், இன்று கொரியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்கியது. வலுவான கொரிய அணியை பாகிஸ்தான் எப்படிச் சமாளிக்கப்போகிறது எனும் எதிர்பார்ப்பு சூழ்ந்திருந்த நிலையில், இந்தப் போட்டியை பாகிஸ்தான் அணி 1-1 என டிரா செய்திருந்தது.
இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான முகமது சக்லைன், “நாங்கள் இன்றைக்கு எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளோம். எங்கள் அணியில் பெரும்பாலும் சர்வதேச அனுபவமே இல்லாத வீரர்கள்தான் இருக்கிறார்கள். இப்படி ஒரு அணியை வைத்துக் கொண்டு வலுவான கொரிய அணிக்கு எதிராக போட்டியை டை செய்தது ரொம்பவே சிறப்பான விஷயம்!” எனப் போட்டியைப் பற்றிப் பேசியவர்,
பின்னர் சென்னையைப் பற்றிப் பேசத் தொடங்கினார். “கடைசியாக இங்கு சர்வதேச போட்டி நடந்தபோதும் நான் வந்திருந்தேன். இங்கிருக்கும் ரசிகர்கள் அற்புதமானவர்கள்.
சென்னையின் மக்கள் பேரன்பு மிக்கவர்களாகவும் உதவிக்கரம் நீட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். நாங்கள் இந்தியாவில் அல்ல பாகிஸ்தானில் இருப்பதைப் போன்றே உணர்கிறோம்.
இங்குள்ள உணவுகளும் அற்புதமாக இருக்கின்றன. எல்லா வகை உணவுகளும் கிடைக்கின்றன. மட்டன் பிரியாணியைப் பார்த்தவுடன் எங்கள் வீரர்கள் குஷியாகிவிட்டார்கள். இங்கே இந்திய அணியை எதிர்கொள்ள ஆர்வமாக காத்திருக்கிறோம்!” என நெகிழ்ச்சியோடு பேசி முடித்தார் முகமது சக்லைன்.