மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் ரோஹித் பி தேவ். 2025-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி நீதிபதி ரோஹித் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். ஆனால் இன்று திடீரென கோர்டில் நீதிபதி ரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்தார். அதோடு தனது சுயமரியாதைக்கு எதிராகச் செயல்பட முடியாது என்றும் கோர்ட்டில் தெரிவித்தார். “எனக்கு யார்மீதும் வெறுப்பு கிடையாது. ஆனாலும் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ரோஹித் பி தேவ்

கோர்ட்டில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், வழக்கறிஞர்களிடம் சில நேரம் கடுமையான நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கடுமையாக உழைக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். 2017-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக ரோஹித் நியமிக்கப்பட்டார். நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு ரோஹித் மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞராக நாக்பூர் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி இருக்கிறார்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியில் இருந்தபோது நக்சலைட்களுடன் தொடர்புடையவராக கருதப்படும் பேராசிரியர் சாய்பாபா மற்றும் 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனையை ரத்துசெய்து உத்தரவிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த உத்தரவை நீதிபதி ரோஹித் பிறப்பித்தார்.

மும்பை உயர் நீதிமன்றம்

இந்தத் தீர்ப்பு மிகவும் சர்ச்சையைக் கிளப்பியது. தீர்ப்பு வெளியானவுடன் தேசிய புலனாய்வு ஏஜென்சி மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு வழக்கை புதிதாக விசாரிக்கும்படி மும்பை உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதோடு பதவியிலிருந்த 6 ஆண்டுகளில் நீதிபதி ரோஹித், பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.