எலான் மஸ்க், கடந்த வாரம் வெரிஃபடு டிக் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளையும், வெரிஃபைடு டிக் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும் மட்டுமே படிக்க முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை ட்விட்டரில் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் ட்வீட்கள் மூலம் ட்விட்டரையும், எலான் மஸ்க்கையும் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். ட்ரோல்கள், கடுமையான விமர்சனங்கள் என ட்விட்டரே கலவரமாகியுள்ளது.
இதற்குப் பதிலளித்த எலான், “இனி நீங்கள் ஆழ்ந்த மயக்கத்திலிருந்து விழித்து போனை/ட்விட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதை விட்டுவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள்” என்று நக்கலாகப் பதிலளித்திருந்தார். இது இன்னும் ட்விட்டர் பயனர்களிடம் விமர்சனத்திற்குள்ளானது.
பலரும் இதை எலானின் மிகப்பெரிய மார்க்கெட்டிங் யுக்தியாகவும், ட்விட்டரில் முதலீடு செய்த பணத்தைப் பல மடங்கு லாபத்துடன் திருப்பி எடுக்கும் திட்டத்தின் ஒருபகுதி என்பதாகவே விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராம் எப்படிப் படங்களுக்கோ அதேபோல டெக்ஸ்ட்க்கு ‘த்ரெட்’ என்றொரு ஆப்பையும், ட்விட்டர் முன்னாள் சிஇஓ-வான ஜாக் டோர்சி ‘ப்ளூ ஸ்கை’ என்றொரு ஆப்பையும் ட்விட்டருக்குப் போட்டியாகக் களமிறக்குகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏராளமான பயனர்கள் ட்விட்டரை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரின் புதிய சிஇஓ-வாகப் பொறுப்பேற்றுள்ள லிண்டா யாக்கரினோ, ட்விட்டரின் இந்த ‘லிமிட்டட் வியூ கவுண்ட்’ என்ற புதிய கட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள லிண்டா, “ட்விட்டர் போன்ற பெரு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும்போது, நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இதுபோன்ற மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவது தவிர்க்க முடியாத விஷயமாகும். இந்த மாற்றங்களும், புதிய நகர்வுகளும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். ட்விட்டர் பயனர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ட்விட்டரின் நிலைமையை உணர்ந்து அதை மேம்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இது சமூகவலைதளங்களில் வைரலாகி கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது. இது குறித்து ட்விட்டர் பயனர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ட்விட்டரின் வீழ்ச்சிக்கு இந்த நடவடிக்கை ஒரு முக்கியக் காரணமாக இருக்கும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.