பொதுவாக பள்ளிகள், மருத்துவமனைகள், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் உட்பட பல முக்கிய இடங்களுக்கு அருகேயுள்ள சாலைகளில், வாகனங்களில் செல்வோர் இந்த வேகத்தில் மட்டும்தான் செல்ல வேண்டும் என போக்குவரத்து சாலைகள் விதிகள் விதிக்கப்பட்டிருக்கும். ஓட்டுநர்கள் அவற்றை மீறும்பட்சத்தில், சாலை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்படும்.
அந்த வகையில் பின்லாந்து நாட்டில் சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்களுக்கு வித்தியாசமான முறையில் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. அதாவது இது போன்ற விதிமீறல் செயல்களில் ஈடுபடுவோருக்கு `டே-ஃபைன் (Day-Fine)’ முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது. டே-ஃபைன் முறைப்படி, சாலை விதிமீறலுக்குள்ளானவர்களின் ஒருநாள் வருமானத்தைக் கணக்கிட்டு, அதை இரண்டால் வகுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இந்த நிலையில், பின்லாந்தில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில், காரில் 82 கி.மீ வேகத்தில் சென்ற ஆண்டர்ஸ் விக்லோஃப் (72) எனும் பணக்காரருக்கு, டே-ஃபைன் முறைப்படி 1,21,000 யூரோவை போலீஸார் அபராதமாக விதித்திருக்கின்றனர். இந்த அபராதம் இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய். அதோடு 10 நாள்களுக்கு அவரின் ஓட்டுநர் உரிமமும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.
ஆலந்தை (Aland) பூர்வீகமாகக்கொண்ட இந்த ஆண்டர்ஸ் விக்லோஃப், லாஜிஸ்டிக்ஸ், ஹெலிகாப்டர் சேவைகள், ரியல் எஸ்டேட், சுற்றுலாத்துறைகளில் வணிகம் செய்யும் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.
இவ்வாறு அபராதத்துக்குள்ளாவது ஆண்டர்ஸ் விக்லோஃப்க்கு இதுவொன்றும் முதன் முறையல்ல. ஏற்கெனவே 2018-ம் ஆண்டில் அவருக்கு 63,680 யூரோ அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற செயலுக்கு மிகவும் வருந்துவதாகத் தெரிவித்த ஆண்டர்ஸ் விக்லோஃப், தன்னுடைய அபராதப் பணம் சுகாதார சேவைக்குப் பயன்படுத்தப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.