மும்பை கோவண்டியைச் சேர்ந்த சபீர் அன்சாரி (18) என்பவர் தன்னுடைய நண்பர்களுக்குப் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நகருக்கு வெளியில் இருக்கும் சாலையோர உணவகத்தில் இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்ட்டியில் சாப்பிட்ட கட்டணம் 10,000 ரூபாய் வந்தது. இந்தக் கட்டணத்தை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சபீர் தெரிவித்தார். ஆனால், அவர்கள் தங்களது பங்குப் பணத்தைப் பிறகு தருவதாகத் தெரிவித்தனர். இறுதியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த சபீர் சாப்பாட்டுக்கான கட்டணத்தைச் செலுத்தினார். பின்னர் சபீர் நான்கு பேரிடமும் பணம் கேட்கச் சென்றார். ஆனால், அவர்கள் `பணத்தைக் கொடுக்க முடியாது’ என்று கூறி மிரட்டி அனுப்பிவைத்தனர். அன்று இரவு சபீர் பிறந்தநாள் கொண்டாடினார்.
அந்த விழாவுக்கு நான்கு பேரும் வந்திருந்தனர். அவர்கள் பார்ட்டியில் கேக் வெட்டிய பிறகு, சபீருக்குச் சாப்பிட கேக் கொடுத்தனர். சபீர் கேக் சாப்பிட்டவுடன் நான்கு பேரும் சேர்ந்து சபீரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டனர்.
மறுநாள் காலையில் சபீர் இறந்திருப்பது தெரியவந்தது. உடனே நான்கு பேரில் இரண்டு பேர் போலீஸில் சரணடைந்தனர். சரணடைந்த இரண்டு பேரும் மைனர்கள். அவர்களுடன் சேர்ந்து சபீரைக் கொலைசெய்த இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடிவந்தனர். இரண்டு பேரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.
அவர்கள் மும்பையிலிருந்து சொந்த ஊருக்குத் தப்பித்துச் செல்வது அவர்களின் மொபைல் போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே குற்றப்பிரிவு போலீஸார் விரைந்து செயல்பட்டு அகமதாபாத்தில் இரண்டு பேரையும் கைதுசெய்தனர். அவர்களது பெயர் ஷாருக், நிஷார் என்று தெரியவந்திருக்கிறது. 17 வயதாகும் மைனர்கள் இரண்டு பேரும் சிறுவர் சீர்திருத்த முகாமில் அடைக்கப்பட்டனர். எஞ்சிய இரண்டு பேர் மீதும் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.