ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்துக்கு தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 290 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. மேலும், விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். “விசாரணைக்குப் பிறகு அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்னணு இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து நடந்திருக்கிறது. தண்டவாளத்தை சீரமைக்க முயன்றுகொண்டிருக்கிறோம்” என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ரயில்வே சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கைவிடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பெங்களூர்-டெல்லி சம்பர்க் கிராந்தி விரைவு ரயில், மைசூரிலுள்ள ஹோசதுர்கா சாலை ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த சிக்னல் குறைபாடு குறித்து எச்சரித்து இந்திய ரயில்வே தலைமையகத்துக்கு, தென் மேற்கு ரயில்வேயின் தலைமைச் செயல்பாட்டு மேலாளர் பி.சி.எம்.ஹரிசங்கர் வர்மா கடிதம் எழுதியிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர் எழுதிய கடிதத்தில், “ஹோசதுர்கா ரயில் நிலையத்தில் ஏற்படவிருந்த விபத்து சம்பவம் சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதைக் குறிக்கிறது. எலெக்ட்ரானிக் சிக்னல் பராமரிப்பாளர், எலெக்ட்ரானிக் இன்டர்லாக் முறையைத் தவிர்த்துவிட்டிருக்கிறார்.
எனவே, பராமரிப்பு முறையை உடனடியாக கண்காணித்து சரிசெய்யாவிட்டால், அது பேரழிவு விபத்துக்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஒருவேளை இந்திய ரயில்வே அந்தக் கடிதத்தை உரிய முறையில் பரிசீலித்துக் கண்காணித்திருந்தால், இந்தக் கோர விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.