முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இரண்டாயிரம் நோட்டை திரும்ப பெறுவதால் இந்திய பணத்தின் மீதான ஸ்திரத்தன்மையும் மற்றும் நேர்மை மீது சந்தேகம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 2000 ருபாயை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் மாதம் இறுதிக்குள் 2000 ரூபாயை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பல தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்துவது, திரும்ப பெறுவது பணத்தின் மீதான நேர்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பேசினோம். அவர், “சிதம்பரம் கூறியது சரி தான். 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது குறித்து நியாயமாக நிபுணர்களிடம் விவாதிக்கப்படவில்லை. அரசின் முடிவுகள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடத்தப்படவில்லை. பணமதிப்பிழப்பு கொண்டு வந்த போது பணம் பதுக்கி வைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் 2000 ரூபாயை பதுக்கி வைத்தாலும் கண்டுபிடித்து விடலாம் என்றெல்லாம் பேசப்பட்டது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்திய பொருளாதார வளர்ச்சி இரண்டு சதவிகிதம் குறைந்தது. அதனை பெரும் பேசுபொருளாக்கியது பாஜக. ஆனால் பண மதிப்பிழப்பின் போது கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது அதற்கு வேறு காரணங்கள் சொல்லி சமாளித்தனர். தற்போது 2000 நோட்டு திரும்ப பெறுவதற்கும் சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதனால் இந்திய பணத்தின் நேர்மை மீது சந்தேகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம்”என்றார்.
இது குறித்து பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “ப.சிதம்பரத்துக்கு அரசியலும் தெரியாது, பொருளாதரமும் தெரியாது. பணமதிப்பிழப்பு ஏற்பட்டபோது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்க்கு மாற்றாக இரண்டாயிரம் ரூபாய் கொண்டு வரப்பட்டது. இதன் புழக்கம் குறைவாக இருப்பதால் தற்போது திரும்ப பெறப்படுகிறது” என்றார்.