“மோடி அரசே, நீதியைக் கொல்லாதே” – திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “காமப்பித்து வன்கொடுமைகளைச் செய்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் உறுதிமிக்க அறப்போர் வெல்லட்டும். மோடி அரசே, நீதியைக் கொல்லாதே…குற்றஞ்சாட்டப்படும் நபரைப் பாதுகாத்திட முயற்சிக்காதே” எனப் பதிவிட்டிருக்கிறார்.
தென்காசி: டாஸ்மாக் பாரில் திருட்டு!
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் சாலையில் டாஸ்மாக் பார் செயல்பட்டுவருகிறது. அந்தக் கடைக்குள் நேற்றிரவு நுழைந்த மர்மநபர்கள் சிசிடிவி கேமராவை அடித்து உடைத்துவிட்டுக் கடையில் இருந்த 58,000 ரூபாய் ரொக்கம், பொருள்களைத் திருடிச் சென்றிருக்கின்றனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, தமிழகம் திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் கடந்த 23-ம் தேதி ஒன்பது நாள் பயணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அதிகாரிகள் உடன் சென்றனர்.
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில், தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஒன்பது நாள்கள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு 10 மணியளவில் தமிழகம் திரும்புகிறார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டிருக்கின்றனர்.