கடந்த சில மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவித்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
சமீபத்திய இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நிய செலவாணி கையிருப்பு அறிக்கையின் படி, தற்போது இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பில் தங்கத்தின் பங்களிப்பு 7.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இது 7.06 சதவீதமாக இருந்தது.
இந்தியா அதன் தங்கத்தை பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மெண்ட் வசம் 437.22 டன் வைத்துள்ளது. இந்தியாவிலேயே 301.10 டன் தங்கம் கையிருப்பாக உள்ளது. மேலும், 56.32 டன் தங்க டெபாசிட் ஆக உள்ளது. ஆக மொத்தம் 795 டன் தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் தங்கம் கையிருப்பாக அதிகம் வாங்கி குவிக்கப்படுகிறது. தங்கம் என்பது அனைத்து நாடுகளுக்குமான பொதுவான கரன்சி. மேலும் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, பங்குச் சந்தையின் அதிக ஏற்ற இறக்கங்கள் ஆகியவை தங்க கையிருப்பு அதிகரிப்புகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.