கோவிட் 19 பெருந்தொற்று காரணமான பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச அவசரநிலை முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம், தேவை ஏற்பட்டால் மீண்டும் அவசர நிலை திரும்பவும் அறிவிக்கப்படலாம் என அது எச்சரித்துள்ளது.

கோவிட்

சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 தொற்று, பின்னர் உலக நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெருந்தொற்று பரவிய காலகட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தொடர் அறிக்கைகள்‌ மூலம் மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு தரும் பணியையும் அது செய்து வந்தது. இதுவரையிலான கோவிட் பரவல்… இங்கே ஒரு ரிவைண்ட்.

கடந்த 2020-ம்‌ ஆண்டு, ஜனவரி 5-ம் தேதி, சீனாவில் பெயர் தெரியாத நிமோனியா போன்ற வைரஸ் பரவி வருவதாக, உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியது.

அந்த வைரஸ் ஒரு‌ மனிதரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் தன்மையுடையது என, ஜனவரி 20-ம் தேதி, உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

கோவிட் தொற்று உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவத் தொடங்கிய பின்பு, ஜனவரி 30-ம் தேதி கோவிட் 19 தொற்று காரணமாக சர்வதேச அளவிலான அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

தொற்று எண்ணிக்கை மிகவும் உயர ஆரம்பித்ததும் மார்ச் 11-ம் தேதி, கோவிட் 19 ’பெருந்தொற்று’ ஆக கொள்ளப்பட்டது.

தடுப்பூசி

2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் கணக்குப்படி உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தால் கூறப்பட்டது.

கோவிட் 19 பற்றிய எச்சரிக்கைகளுடன் உலக சுகாதார நிறுவனம் தனது பணியை நிறுத்திக் கொள்ளவில்லை. மக்களுக்கு போதுமான சிகிச்சை கிடைப்பதற்கு, தன்னாலான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே வந்தது. மேலும் பெருந்தொற்றை சமாளிப்பதற்கு போதுமான நிதி உதவி திரட்டும் பணியையும் செய்தது.

தடுப்பூசி தயாரிப்பிலும் உலக சுகாதார நிறுவனத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. கோவேக்ஸ் ப்ரோக்ராம் (Covax program) என்ற பெயரில் உலக சுகாதார நிறுவனம் Coalition for Epidemic Preparedness Innovations என்ற நிறுவனத்தோடு இணைந்து, தடுப்பூசி தயாரிப்புப் பணியை செய்து வந்தது.

கோவிட்

மேலும் தடுப்பூசிகளை‌ தேவையான நாடுகளுக்கு முறையாக பங்கிட்டு கொடுப்பதற்கும் உதவி புரிந்தது. ஜனவரி 2021-ம் ஆண்டு கோவிட் 19 தொற்று ஏற்பட்டதன் காரணம் குறித்து ஆராய, உலக சுகாதார நிறுவனம் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவானது சீனாவுக்குச் சென்று தன் ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டது.

முதல் கட்ட பரிசீலனையில் போதுமான தகவல்கள் இல்லாததால் இரண்டாம் கட்ட ஆய்வு 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்றது. ஆய்வு முடிவில் கோவிட் 19, சீனாவின் வூஹான் நகரில் இரவு நேரச் சந்தையில் இருந்து பரவி இருப்பதற்கே வாய்ப்பு அதிகமே‌ தவிர, ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து பரவவில்லை எனக் கூறப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம்

தற்போது தொற்று எண்ணிக்கை உலகம் முழுவதுமே குறைந்துவிட்ட நிலையில் உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை விலக்கிக் கொண்டுள்ளது. ஆனால் அவசரநிலை நீக்கப்பட்டது என்ற காரணத்துக்காக, கோவிட் தொடர்பாக மக்கள் மிகவும் அலட்சியமாக இருக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்பட்டால் மீண்டும் அவசர நிலை திரும்ப அறிவிக்கப்படலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.