இரண்டாம் இன்னிங்ஸ் 17வது ஓவரிலேயே முடிந்து போனது. கிட்டத்தட்ட 400 ரன்களை அடித்திருந்தன இரண்டு அணிகளும். எந்த ஒரு பந்துவீச்சாளரும் இந்த மாதிரி மைதானத்தில் எல்லாம் பந்து வீச மாட்டோம் என்று போராட்டம் பண்ணாததே நேற்றைய ஆட்டத்தில் பெரிய விஷயமாக தோன்றியது.

MI

பாட்டி தலையில் வடிவேலு பத்து போட்டது போன்று தான் நேற்று வரை புள்ளிப்பட்டியல் இருந்தது. 5 அணிகள் பத்து புள்ளிகளுடன் டேபிளின் மத்திய பகுதியை ஆக்கிரமித்து இருந்தன.‌ இந்நிலையில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் நேற்று மோதின. வெல்லும் அணி நிச்சயம் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு சென்று விடும் என்பதால் இந்தப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்ச்சருக்கு பதிலாக அணிக்குள் வந்திருந்த கிறிஸ் ஜோர்டன் மும்பை அணிக்குள் புதிதாக வந்திருந்தார்.

கோலி மற்றும் டூப்ளசிஸ் இணைந்து பெங்களூர் அணியின் இன்னிங்ஸை தொடங்கி வைத்தனர். ஆட்டத்தின் நான்காவது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் இருந்தபோதே டூப்ளெசிஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் மும்பை வீரர் வதீரா. ஆனால் அடுத்த பந்திலேயே கோலி ஆட்டமிழக்க மைதானம் முழுவதும் ஆர்ப்பரித்தது. புதிய முயற்சியாக அனுஜ் ராவத்தை மூன்றாவது வீரராக‌‌ அனுப்பி பார்த்தது பெங்களூரு. “பருத்தி மூட்ட கொடௌன்லயே இருந்திருக்கலாம்” என்பது போல 6 ரன்களில் வெளியேறினார் ராவத். இரண்டு விக்கெட்டுகளையுமே மும்பையின்‌ பெஹர்ண்டாஃப் வீழ்த்தினார்.

அதன்பிறகு பழைய ஸ்க்ரிப்ட் தான் மீண்டும் அரங்கேறியது. இரண்டு விக்கெட்டுகள் விழுந்த தடமே தெரியாத அளவுக்கு களத்துக்குள் வந்து அதகளம் செய்து கொண்டிருந்தார் மேக்ஸ்வெல்.‌ மிடில் ஓவர்களில் எப்போதும் விக்கெட்டை வீழ்த்தி ரன்களை கட்டுப்படுத்தும் மும்பையின் மூத்த உறுப்பினர் பியூஸ் சாவ்லா கூட இன்று நான்கு ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்தார். அறிமுக தொப்பியை வாங்கிய ஆர்வத்தில் பந்து வீச‌ வந்த ஜோர்டன் முதல் ஓவரிலேயே இரண்டு‌ சிக்சர்கள்‌ தர ரன்கள்‌ வேகமாக‌ வந்தன. 10 ஓவர்களிலேயே 104 ரன்கள் எடுத்தது பெங்களூரு.

RCB

எப்படியும் ‌230 ரன்களை துரத்த வேண்டியது வரும் என்ற‌ நினைப்பில் மும்பை ரசிகர்களே “உடம்ப இரும்பு ஆக்கிக்கடா கிரிகாலா”‌என்று இருந்தனர்.‌

ஆனால்‌ மீண்டும் பந்து வீச வந்த பெஹரண்டாஃப் மேக்ஸ்வெல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார் 13வது ஓவரில். 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அவுட்‌ ஆனார் மேக்ஸ்வெல்.

இதன் பிறகு தான் மும்பை அணி இத்தொடரில் என்றும் இல்லாத திருநாளாக இன்று சிறப்பாக பந்து வீச ஆரம்பித்தது.‌ 14வது‌ ஓவரில்‌ லாம்ரோர் விக்கெட், 15வது ஓவரில் டூப்ளசிஸ் விக்கெட்‌ என சீக்கிரம் விக்கெட்டுகளை எடுத்தது. கார்த்திகேயா, ஜோர்டன், ஆகாஷ் மாத்வால் என‌ அனைவரும் சிறப்பாக பந்துவீச கடைசி 5 ஓவர்களில்‌ 47 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு.‌ “நம்ம‌ அவ்வளவு ஸ்ட்ராங்கா இல்ல இவனுக‌ இவ்ளோ வீக்கா” என்று நிச்சயம்‌ ஒவ்வொரு மும்பை பந்துவீச்சாளரும்‌‌ நினைத்திருப்பர்.‌

MI

200 ரன்கள் சேஸ் எல்லாம் இப்போது மும்பை ரசிகர்களுக்கு பழகிப்போன விஷயம்.‌ ரோகித் இம்முறையும் டக் அவுட் ஆகி ஹாட்ரிக் டக் எடுப்பாரோ என்று நினைத்த போது முதல் பந்திலேயே அவரது டிரேட் மார்க் புல் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தார் ரோகித்.‌ ஆனாலும் ரோகித் பெரிதாக ரன்கள்‌ சேர்க்கவில்லை. 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.‌

ஆனால் 5வது ஓவர் வரை களத்தில் நின்றார் ரோகித்.‌ இந்த முதல் 5 ஓவர்களில் மறுமுனையில் நடந்த சரவெடி பேட்டிங் தான் அணிக்கு அவ்வளவு பெரிய அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 15.5 கோடிக்கு‌ வாங்கப்பட்ட கிஷன் இந்த இரண்டு ஆண்டுகளில் சந்திக்காத விமர்சனங்களே இல்லை.‌ அதற்கெல்லாம் சேர்த்து தரும்‌ விதமாக‌ நேற்று பெங்களூரு பந்துவீச்சை எல்லா பக்கமும் சிதறடித்தார் கிஷன்.

Ishan

பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட்டாய் இருந்த சிராஜ் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள். ஹேசல்வுட் பந்தில் கிஷன் அடித்த சிக்சர் எல்லாம் நிலாவுக்கு போய் விழுந்திருக்கும் என்று நினைக்கும்‌ அளவுக்கு பெரிய சிக்சர் அது.‌ 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார் கிஷன். ஐந்தாவது ஓவரிலேயே கிஷன் மற்றும் ரோகித் இருவரும் அவுட் ஆகினர். வழக்கம் போல கிரீனை அனுப்பாமல் நெஹல் வதீராவை களத்திற்குள் அனுப்பினார் கேப்டன்‌ ரோகித்.

ரன் ரேட் சிறியதாக‌ சரிந்த‌ உடனேயே ஆறாவது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து அடுத்து நடக்க இருந்த வான‌வேடிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டார் வதீரா.‌ ஒரு பக்கம் வதீரா மறுபக்கம் சூர்யகுமார். பெங்களூர் பந்து வீச்சாளர்களால் மூச்சு கூட விட முடியவில்லை. ஸ்லோயர் பந்துகள், கட்டர்கள் என எல்லாவற்றையும் முயற்சித்து பார்த்தனர். ஆனால்

SKY

சூர்யகுமார் ஏதோ வீடியோ கேம் விளையாடுவது போல எப்படி பந்து போட்டாலும் அதை மைதானத்தின் அனைத்து பக்கங்களுக்கும் பறக்க விட்டார்.

டெத் ஓவர்கள் வீச வேண்டிய சிராஜை முன்னரே வீச வைத்து விக்கெட் எடுக்க நினைத்தால் அந்த ஓவரிலும் சிக்சர் பவுண்டரி என 13 ரன்கள் எடுத்தது மும்பை. கடைசியில் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து வெளியேறினார் சூர்யகுமார்.

டூப்ளெசிஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவற விட்டதற்கு பரிகாரமாக இந்த பக்கம் அரை சதம் அடித்தார் வதீரா. 200 ரன்களை 17வது ஓவரிலேயே எட்டியது மும்பை. ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்கள் என்ற டார்கெட்டை இவ்வளவு வேகமாக சேஸ் செய்த அணி மும்பை தான். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

SKY

இனி வரும் ஆட்டங்கள் ஒவ்வொன்றும் பிளே-ஆஃப்ஸ் வாய்ப்பை பாதிக்கும் என்பதால் கிட்டத்தட்ட பல அணிகளுக்கு அடுத்து வரும் ஆட்டங்கள் எல்லாமே நாக்-அவுட் போட்டிகள் தான் என்றே கூறலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.