தென்னாப்ரிக்காவின் வொர்செடஸ்ரலிருந்து (Worcester), நெல்ஸ்ஃப்ரூட் (Nelspruit) வரை பயணிக்கக்கூடிய ஒரு சிறிய தனி விமானத்தில் 4 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானி ருடால்ப் எராஸ்மஸ் (Rudolf Erasmus) என்பவர் இந்த விமானத்தை இயக்கினார்.
விமானம் புறப்பட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு, தரையிலிருந்து சுமார் 11,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தான், அவர் தன் இருக்கைக்கு கீழ் ஒரு விஷப்பாம்பு இருப்பதைக் கண்டறிந்தார். உடனே அருகிலிருந்த விமான நிலையமான ஜோக்கனைஸ்பெர்க்கில் (Johannesburg) விமானத்தைத் தரையிறக்கினார்.
இது தொடர்பாக அவர், “விமானத்தை இயக்குவதற்கு முன்பு திங்கட்கிழமை காலை நாங்கள் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டோம். அப்போது வொர்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து சிலர் விமானத்தின் இறக்கைகளுக்கு அடியில் பாம்பு ஒன்று சென்றதைப் பார்த்ததாக் கூறினார்கள். அங்கிருந்தவர்கள் அதனைப் பிடிக்கவும் முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் என்ஜினுக்குள் சென்று அந்த பாம்பு ஒளிந்துகொண்டுள்ளது. நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் பாம்பு வெளியேறிவிட்டதாக நினைத்து, அதன் பிறகு இதனைக் கண்டுகொள்ளவில்லை.
நான் விமானத்தை இயக்கும் பொழுது எப்போதுமே எனக்கான தண்ணீர் பாட்டிலை என் இருக்கைக்கு அருகிலேயே வைத்திருப்பேன். இன்றும் அப்படி வைத்திருந்த போது ஏதோ ஈரமாக இருப்பது போலிருந்தது. பாட்டிலை சரியாக மூடாமல் தண்ணீர் தான் சொட்டுகிறதோ என நினைத்துப் பார்த்தால், என் இருக்கைக்கு அடியில் பாம்பு தன் தலையைக் கவிழ்த்து, சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது. பார்த்ததும் அப்படியே ஒரு நிமிஷம் திகைச்சு விட்டேன்.
விஷப்பாம்பு என்பதால் பயமும் இருந்துச்சு. ஆனாலும் பயப்பட வேண்டிய நேரம் அல்ல அது என எண்ணினேன். பயணிகளிடம் சொல்லலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். சொன்னால் அவர்களும் பயந்து விடுவார்கள். ஆனால் விமானத்தில் என்ன நடக்கிறது எனத் தெரிய வேண்டும் அவர்களுக்கு, அதனால் ‘விமானத்தில் ஒரு பிரச்சனை. விமானத்தில் பாம்பு இருக்கிறது. எனவே உடனடியாக தரையிறக்கியாக வேண்டும்’ என்றேன்.
விமானம் வெல்காம் பகுதியை நெருங்கிய வேளையில் விமானத்தைத் தரையிறக்குவது குறித்து ஜோகன்னஸ்பர்க் கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்டேன். அங்கு தரையிறக்க அனுமதி கிடைத்ததும் துரிதமாகச் செயல்பட்டு விமானத்தைத் தரையிறக்கினேன். முதலில் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பிறகு எனக்கு அருகில் இருந்தவர் விமானித்திலிருந்து வெளியேறினார். கடைசியாக நான் வெளியேறினேன். பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்திருந்தோம். ஆனால் அவர்கள் வருவதற்குள் பாம்பு மீண்டும் விமானத்திற்குள் எங்கோ சென்று மறைந்துவிட்டது. அதனைத் தேடுவதற்காக சில விமான பாகங்களைக் கழற்ற வேண்டியிருந்தது. அதற்குள் இரவும் வந்துவிட்டதால், காலையில் பணியைத் தொடர முடிவு செய்தோம்” என்றார்.
பதற்றமடையாமல், நிதானமாகச் செயல்பட்டு அனைவரின் உயிரையும் காப்பாற்றிய விமானியின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.