கரூர் தான்தோன்றிமலையில் அமைந்திருக்கிறது அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில். தென்திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்படும் இந்தக் கோயிலில் புரட்டாசி மாத பெருந்திருவிழாவும் மாசித் திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழாக்களின்போது உள்ளூர் மட்டுமன்றி வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு பெருமாளைத் தரிசித்து மகிழ்வார்கள்.
அந்த வகையில், இந்தாண்டு மாசி மகத்திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா கடந்த பிப்ரவரி 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, தினமும் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பெருமாள். நேற்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
இன்று காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமி பெரிய தேரிலும், அனுமன் சின்ன தேரிலும் எழுந்தருளினார்கள். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். வரும் 8-ம் தேதி தெப்பத்தேர் சுற்றி வருதல் நிகழ்வு நடைபெறுகிறது. 15-ம் தேதி புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.