உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், 2023-ல் ஒருநாளைக்கு 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கோவிட் பெருந்தொற்று சமயத்திலிருந்து பணி நீக்கம் செய்த தொழில்நுட்ப நிறுவனங்களையும், ஊழியர்களின் எண்ணிக்கையும் கணக்கிட்டு வருகிறது Layoffs.fyi என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம்.
சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், `ஜனவரி மாத முதல் 15 நாட்களிலேயே, உலகம் முழுவதிலுமுள்ள 91 நிறுவனங்களில் 24,000 தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2022-ல் உண்டான பொருளாதார வீழ்ச்சி மற்றும் மந்தநிலை காரணமாக, 1000 தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து சுமார் 1.5 லட்ச ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்’ என அறிவித்துள்ளது.
மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான மெட்டா, அமேசான், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் தங்களது பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
சமூக வலைத்தள நிறுவனமான ஷேர்சாட் அதன் பணியாளர்களில் 20 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்தது. போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் ஓலா 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மளிகை பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் டன்சோ 3 சதவிகித பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது.
இவ்வாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்களது பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, ஊழியர்களுக்கு நிச்சயமற்ற பொருளாதார சூழலை ஏற்படுத்துகிறது.