ஒடிசா மாநிலத்தின் புபனேஷ்வரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரண்டு சிறுமிகள் கட்டிவைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக முக்கியக் குற்றவாளி கைதுசெய்யப்பட்டிருப்பதாக போலீஸார் இன்று தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, கடந்த திங்கள்கிழமை மாலை, 12 , 14 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாட்டியா ரயில் நிலையத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் கடத்திச் சென்றிருக்கின்றனர். அதோடு சிறுமிகளை ரயில்வே மேம்பாலத்துக்கு அழைத்துச் சென்ற இளைஞர்கள், அவர்களைக் கயிற்றால் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்து, இதை வெளியில் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியிருக்கின்றனர்.
மறுநாள் காலை வீட்டுக்கு வந்த சிறுமிகள், தங்களின் பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறியிருக்கின்றனர். பெற்றோர்களும் புகாரளிக்க, ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிகள், கசாப்புக் கடைக்காரர்கள் இருவர் தங்களைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரை போலீஸார் இன்று கைதுசெய்திருக்கின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபரைத் தேடிவருகின்றனர்.