நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரைச் சுற்றிலும் வனங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால், மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்ந நிலையில், ஊட்டி அருகில் உள்ள இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை அருகில் கடந்த ஒரு மாதமாக புலி நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் மக்கள் வனத்துறையிடம் தகவல் தெரிவித்து வந்தனர். இந்து நகர் அருகில் உள்ள பகுதிக்கு நேற்று மாலை வந்த புலி ஒன்று மேய்ச்சலில் இருந்த பசுமாட்டை தாக்கியது. உள்ளூர் மக்கள் இதை வீடியோ எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் வனத்துறை பணியாளர்கள் புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலி நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்த உள்ளூர் மக்கள், “ஒரு மாதமாகவே இந்த பகுதியில் புலி நடமாட்டம் இருந்து வருகிறது. மாடு , எருமை போன்ற கால்நடைகளை தாக்கி வருகிறது. வீடியோ ஆதாரத்துடன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம்” என்றனர்.
கண்காணிப்பு பணிகள் குறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், “இந்த பகுதியில் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புலியால் வேட்டையாடப்பட்ட பசுமாட்டின் உடல் அதே இடத்தில் கிடக்கிறது. மீதம் இருக்கும் இறையை உண்ணுவதற்காக அதே இடத்திற்கு அந்த புலி வர வாய்ப்பு இருக்கிறது. புலியின் உடல்நிலையை கண்டறியும் நோக்கத்தில் கண்காணித்து வருகிறோம்” என்றனர்.