நடிகர் விஜய்யின் 70-வது படத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவின் 4 மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களை வைத்து அவர் படம் தயாரிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

‘மிஸ்டர் கூல் கேப்டன்’ என்று அழைக்கப்படும் தோனி, அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற நிலையில், உள்ளூர் போட்டியான ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி ஏராளமான துறைகளில் முதலீடு செய்து பணம் சம்பாதித்தும் வருகிறார். விவசாயம் செய்வது, பள்ளிக் கூடங்கள் அமைத்துள்ளது, ஸ்டார்ட்டப் நிறுவனங்களில் முதலீடு செய்வது, விளம்பரப் படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

image

மேலும் தமிழரான ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதிய ‘அதர்வா: தி ஆர்ஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் சூப்பர் ஹீரோவாகவும், போர் வீரர்களின் தலைவராகவும் தோனி நடித்துள்ளார். இதனை தோனி என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பதாக, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தோனியின் மனைவியுமான சாக்ஷி தோனி கூறியிருந்தார். இந்நிலையில், தோனி என்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் விஜய்யின் 70-வது படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் கசிந்துயுள்ளது.

ஏற்கனவே நயன்தாராவை வைத்து தோனி என்டெர்டெயின்மெண்ட் தமிழ் படம் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியானநிலையில், இதுகுறித்து மறுப்பு தெரிவித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய்யை வைத்து தமிழிலும், மகேஷ் பாபு வைத்து தெலுங்கிலும், பிரித்விராஜை வைத்து மலையாளத்திலும், கிச்சா சுதீப்பை வைத்து கன்னடத்திலும் படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

நடிகர் விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரத் தூதராக இருந்துள்ளார். மேலும் தோனி மற்றும் விஜய் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பின் போதும் சந்தித்துக்கொண்டனர். இந்தப் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் தான் இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து தோனி என்டெர்டெயின்மெண்ட் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.