உத்தரப்பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக அவரின் உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 22 -ம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் 82 வயதான முலாயம் சிங் காலமானார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்
மோடி தனது இரங்கல் பதிவில், “நாங்கள் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்களாக இருந்தபோது முலாயம் சிங் யாதவ்-ஜியுடன் பலமுறை தொடர்பு கொண்டுள்ளேன். நெருங்கிய தொடர்பு தொடர்ந்தது, அவருடைய கருத்துக்களைக் கேட்க நான் எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரின் மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.” என கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் யாதவ் மறைவுக்காக 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.