சென்னையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற, சிறந்த கராத்தே வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் நேற்று கலந்துகொண்டார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கும் அரசின் முயற்சிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “மக்களுக்கு பயனில்லாத எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்காது. மின்துறை தனியார்மயமாவதன் மூலம் மக்களுக்கு முதலில் மின் கட்டணம் குறையும். மின்சார இழப்பும், மின் திருட்டும் நடப்பது தடுக்கப்படும்.

அடிப்படை வசதிகளும் மின்கருவிகளும் புதிதாக மாற்றப்படும். நாளை அல்லது மறுநாள் அதற்கான அதிகாரிகள் வருகிறார்கள். விவாதத்தில் சந்தேகங்கள் எல்லாம் கேட்கப்பட்டு தீர்த்து வைக்கப்படும். அரசு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறது. அதனை அதிகாரிகளும் ஊழியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். பல மாநிலங்களில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் பயன்பெற்று வருகிறார்கள். தொடக்கத்தில் எதிர்த்தவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  மக்களுக்காகத்தான் எந்த முடிவும். தனியார்மயம் என்பதால் தனியாருக்கு லாபம் கொடுப்பதற்காக என்று கிடையாது. மக்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம்.

புதுச்சேரி மின்துறை

ஊழியர்களைப் பொறுத்தவரை,  இன்று கிடைக்கும் பதவி உயர்வுகள் கிடைக்குமா… வேலைக்கு பங்கம் வருமா என்ற சந்தேகம் இருக்கிறது. அவை எதுவும் வராது என்பதை தெளிவுபடுத்துகிறோம்” என்றார்.

அதையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் மக்கள் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”ஆளுநர் அலுவலகமாக இருந்தாலும், பஞ்சாயத்து அலுவலகமாக இருந்தாலும் அவை மக்களுக்காகத்தான். மக்களை சந்திக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. நேற்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டேன். அது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அதிகாரத்தில் தலையிடுவதாக அர்த்தம் இல்லை.

அதிகாரத்தில் இருக்கும்போது நம்மால் சிலருக்கு தீர்வு கொடுக்க முடியும் என்பதால்தான் அந்த நடவடிக்கை. உதவி செய்வதை  அரசியலாக்க கூடாது. நேரத்தை செலவழித்து மக்களின் குறைகளைக் கேட்டு அதிகாரிகளிடம் சொல்லி கொஞ்சம் பேருக்கு உதவலாம் என்று நினைப்பதை தவறு என்று சொல்லக்கூடாது. முதலமைச்சர் ரங்கசாமி இதை தவறாக நினைக்க மாட்டார். மக்களை சந்திப்பது மனிதாபிமானத்தின் அடிப்படையில். அதிகாரத்தில் இருக்கும் அனைவரும் இதை செய்வது வழக்கம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.