நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (02.10.2022 ) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராமன் தலைமை வகித்தார். இதில் அந்தப் பகுதி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கிராம சபைக் கூட்டத்தில், “கருப்பம்புலம் ஊராட்சியில் வசிக்கும் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு முழுமையாக வீட்டு வரி கட்டணத்திலிருந்து விலக்களிப்பது” என ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராமன் தலைமையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராமனிடம் பேசினோம். “எங்கள் ஊராட்சியில் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் எட்டு பேரும், தற்போது பணியில் ஒருவரும்தான் இருக்கிறார். உயிரைப் பணயம் வைத்து நாட்டை பாதுகாக்கும் அவர்கள் மரணித்தால், ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்கிறோம் அவ்வளவுதான். ஆனால் அவர்கள் வாழ்கிறபோது வசிக்கும் கிராமத்தில் மரியாதை ஏதும் தரப்படுவதில்லை. எனவேதான் அவர்கள் சேவையை மதித்து, வீட்டு வரி விலக்களித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதனைப் பின்பற்றி நாடு முழுவதும் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்றார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக இரவு – பகலாக போராடும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகத்தில் முதன்முதலாக வீட்டு வரி கட்ட தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.