இதுவரை இல்லாத அளவிலான வெயிலை இங்கிலாந்து மக்கள் எதிர்கொண்டுவருகிறார்கள். வெயிலை சமாளிக்கமுடியாமல் அங்குள்ள மக்கள் திணறிவருகிறார்கள்.
இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவாக 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. முன்னதாக 2019 ல் காம்ப்ரிட்ஜ் பொட்டானிக் கார்டன் பகுதியில் 28.7 டிகிரி வெயில் பதிவானதே முந்தைய அதிகபட்ச அளவாக இருந்தது. இந்நிலையில் மத்திய, வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளிலும் தலைநகரான லண்டனிலும் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தாக்கம் காரணமாக, மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகம் வெயில் அடிக்கக்கூடிய சிவப்பு எச்சரிக்கை பகுதிகளுக்கு பயணப்பட வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகமும் எச்சரித்துள்ளது. இந்த அளவு அதிக வெயிலை சமாளிக்கும்வகையில், ரயில்கள் இல்லை என்று போக்குவரத்து செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார். கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் நீர்நிலைகளையும், நீச்சல் குளங்களையும் நாடிவருகிறார்கள்.
திடீர் வெப்ப மாற்றம் ஏன்?
இங்கிலாந்தில் “வெப்ப அலைகளின்” அதிகபட்ச தாக்கத்தால் இந்த திடீர் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெப்ப அலைகள் இயற்கையாய் உருவானது. இதன் உருவாக்கம் மனிதனால் தூண்டப்பட்டது என்கிறார் ஆராய்ச்சியாளர்கள். தொழில்மயமாக்கலுக்கு (Industrialization) பிறகுதான் இந்த வெப்ப அலைகள் உருவானதாகவும் இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்து விட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். வரும் நாட்களில் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை உலக நாடுகள் கணிசமாக குறைக்காவிட்டால் இங்கிலாந்தின் நிலை நிச்சயம் மற்ற நாடுகளிலும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.