கடந்த ஏப்ரல் 23 -ம் தேதி 25-வது உலகப் புத்தக நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது. டிவிட்டரில் முதல் முறையாக 24 மணிநேரத்தையும் கடந்து, `Book Readers Space Marathon’ என்ற பெயரில் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தும் நோக்கில் ஸ்பேஸ் ஒருங்கிணைக்கப்பட்டது.
Dr. உமை (@umayasho) என்பவர் இதை முன்னெடுத்துச் சென்றார். @TamilSpaceViz மற்றும் @tamilspaces அவர்களின் தொழில்நுட்ப உதவியுடன், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் வரவேற்புடன் இந்த ஸ்பேஸ் நிகழ்ச்சி பயனுள்ள வகையில் நடைபெற்றது.
பல்வேறு தலைப்புக்களில், ஆர்வமூட்டும் வகையில், சிறந்த எழுத்தாளர்களுடனும், தேர்ந்த வாசிப்பனுபவமுள்ள வாசகர்களுடனும், ஏப்ரல் 22-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு 12 மணியையும் கடந்து கலந்துரையாடல் நடந்தது.
சுமார் 3000 மக்கள் இந்த மெய்நிகர் கீவெளியில் (space) பங்கேற்றுள்ளனர். இது எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கிடைத்த பெருவெற்றி.
எழுத்தாளர்கள் நர்சிம், இராகவன், சிறார் இலக்கிய எழுத்தாளர் விழியன், மேகலா ராம்மூர்த்தி மற்றும் கல்வியாளர் SKP கருணா போன்ற பலர் கலந்துகொண்டனர். அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர். வாசிப்போடு நின்றுவிடாமல் எழுதவும் வாசகர்களை ஊக்குவித்தனர். முதன்முறையாக நடந்தேறிய இந்த நெடுந்தொலை ஓட்டக் கீவெளி இனிவரும் இத்தகைய கீவெளி நிகழ்வுகளுக்கு ஒரு அளவுகோலாக இருக்கும் வகையில் அமைந்தது தனிச்சிறப்பு.
பொறுமையும், ஆர்வமும், நேரமும், புத்தக வாசிப்பும் குறைந்து வருகிறது எனச் சொல்லப்படும் இக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அதை பொய்யாக்கி வாசிப்பின் மகத்துவத்தை உணரச் செய்திருக்கிறது.