தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் அழகு பாண்டி. இவர் மனைவி ஆனந்தவள்ளி. அழகுபாண்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவினால் உயிரிழந்துவிட்ட நிலையில், ஆனந்தவள்ளி தற்போது தன் மகன் பன்னீர்செல்வத்துடன் வசித்து வருகிறார். ஆனந்தவள்ளிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆச்சிக்குட்டி என்ற பெண்ணுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. ஆச்சிக்குட்டி குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில் ஆனந்தவள்ளிக்கும் பணம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் பணம் கொடுக்கல், வாங்கலில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தனக்கு வட்டியுடன் சேர்த்து 16 லட்சம் ரூபாய் தர வேண்டும் என ஆனந்தவள்ளியிடம் ஆச்சிக்குட்டி கேட்டுள்ளார். அதற்கு 3,50,000 ரூபாய்தான் வாங்கியுள்ளேன். அதை மட்டும்தான் தர முடியும் என ஆனந்தவள்ளி கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, ஆனந்தவள்ளியின் வீட்டை ஆச்சிக்குட்டி பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டதுடன், பணத்தைக் கொடுத்தால்தான் சாவியைத் தருவேன் எனக்கூறி ஆனந்தவள்ளியை வெளியேற்றி விட்டாராம்.
இதையடுத்து ஆனந்தவள்ளி, ராஜபாளையத்தில் வேலைப் பார்த்து வரும் தன் மகன் பன்னீர்செல்வத்தின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில், ஆச்சிக்குட்டி, ஆனந்தவள்ளியின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு சிகரெட் அட்டைக்குள் 8 துப்பாக்கித் தோட்டக்கள் இருப்பதைப் பார்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆனந்தவள்ளியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
“இறந்து போன என்னோட கணவர்தான் இந்த தோட்டக்களை வச்சிருந்தார். 10 வருஷத்துக்கு மேல் எங்க வீட்டுல இந்த தோட்டாக்கள் இருக்கு. இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என போலீஸாரிடம் கூறியுள்ளார் ஆனந்தவள்ளி.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தரப்பில் பேசினோம். “ஆனந்தவள்ளியும் குட்டியும் நண்பர்கள். ஆனந்தவள்ளியோட வீட்டுல தோட்டக்கள் இருப்பது ஆச்சிக்குட்டிக்கு தெரிந்து இருக்கலாம். கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருப்பதால் ஆனந்தவள்ளியை மாட்டிவிட வேண்டும் என ஆச்சிக்குட்டி செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.