பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வைச் சந்தித்து வருகிற நிலையில், `இம்ரான் கான் சரியாக அரசாங்கத்தை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என மக்கள் குற்றம்சாட்டினர். இதையொட்டி, இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால்,இம்ரான் கான் பதவி பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாக தொடர்சியாகக் கூறி வருகிறார்.
முன்னதாக, `முந்தைய இம்ரான் கானின் அரசாங்கம், ஊழல் நிறைந்த அரசாங்கம்’ எனப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தான் (பி.டி.ஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் தனது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட முன்வருமாறு அழைத்திருக்கிறார்.
இது தொடர்பாக இம்ரான் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒவ்வொரு பாகிஸ்தானியரும், அதாவது பி.டி.ஐ கட்சியின் ஆதரவாளராக இருந்தாலும்… இல்லாவிட்டாலும், நம் நாட்டின் ‘அப்பட்டமான அவமதிப்பு’க்கு எதிரானப் போராட்டத்தை நடத்த மே கடைசி வாரத்தில் இஸ்லாமாபாத் நோக்கி அணிவகுத்துச் செல்ல வேண்டும். நான் குறிப்பாக இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், இளைஞர்கள் கொடிகளுடன் வெளியே வந்து பாகிஸ்தான் தேசம் உயிருடன் இருப்பதை உலகம் முழுவதும் சொல்ல வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.