பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் காரணமாக கடந்த ஏப்ரல் 10 அன்று இம்ரான் அரசு கவிழ்க்கப்பட்டு, ஷெபாஷ் ஷெரீப் தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியமைத்தது.
ஆட்சியமைத்த கையோடு… இம்ரான் கான் பிரதமராகப் பதவிவகித்தபோது வெளிநாட்டுத் தலைவர்களின் பரிசாக வந்த அரசு கருவூலத்துக்குச் சேர வேண்டிய பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை, இம்ரான் கானும் அவர் மனைவியும் குறைந்த அளவில் பணத்தை செலுத்தி தாங்களே வைத்துக்கொண்டதாக ஷெபாஷ் ஷெரீப் அரசு குற்றம்சாட்டியிருந்தது.
இந்த நிலையில், இம்ரான் கான் ஆட்சியைத் தக்கவைக்க, தன்னுடைய அரசின் கடைசி நிமிடம் வரை, பாகிஸ்தான் ராணுவத்திடம் கெஞ்சினார் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக நேற்றிரவு லாகூரில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் பேசிய மரியம் நவாஸ், “அன்று இம்ரான் கான் மிக அவநம்பிக்கையோடிருந்தார். அவர், தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள, தன்னுடைய அரசின் கடைசி நிமிடம் வரை பாகிஸ்தான் ராணுவத்திடம் கெஞ்சினார். அதுமட்டுமல்லாமல், தனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாகவும் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியிடம் உதவியை நாடினார்” என இம்ரான் கானை விமர்சித்துப் பேசினார்.