`உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்..!’
உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர். விரைவில் இது ரஷ்யாவால் கைப்பற்றப்படும் முதல் நகரமாக மாற உள்ளது என்ற தகவல் வெளியாகி வருகிறது. விமான நிலையங்களை தொடங்கி உக்ரைன் நாட்டின் துறைமுகங்களை கைப்பற்றும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளதாம் ரஷ்ய ராணுவம். கருங் கடலை ஒட்டியுள்ள முக்கியமான துறைமுகங்களை கைப்பற்ற தீவிரமான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.
`நீங்கள் அனுபவித்திராத விளைவுகளை சந்திக்க நேரிடும்!’ – புதின்
ரஷ்ய அதிபர் புதின், “எங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் பிற நாட்டினர் யாராவது தலையிட்டால், அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
உக்ரைன் ரஷ்யா போர்… பைடன் கண்டனம்!
ரஷ்யாவின் போர் முடிவுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. அமெரிக்க அதிபர் பைடன், “இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான முறையில் பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவை பொறுப்பேற்க வைக்கும்.
ரஷ்ய ராணுவப் படைகளின் நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளான உக்ரைன் மக்களுக்கு இன்று இரவு முழு உலகத்தின் பிரார்த்தனைகள் உடன் இருக்கும். அதிபர் புடின் ஒரு பெரும் உயிர் இழப்பு, மனித இனத்துக்கு துன்பத்தை கொண்டு வரும் ஒரு திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார்” என கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், `நான் இன்று மாலை வெள்ளை மாளிகையில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொட்டது!
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் தொடரும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
உக்ரைன் தலைநகரை தாக்க தொடங்கியது ரஷ்ய படைகள்
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கு வருவதாக கூறப்படுகிறது.
கோரிக்கை வைத்த ஐநா… நிராகரித்த புதின்!
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இருந்த உலக நாடுகளின் அச்சம்… ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்குமா என்பதற்கு இன்று பதில் கிடைத்து இருக்கிறது. போரை தொடங்குவதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் புதின் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி செய்ளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்க புதின் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆயுதங்களை கீழே போடுமாறு உக்ரைனை ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது.
முன்னதாக இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடத்தியது.
அதில் பேசிய ஐ.நா பொது செயலாளர் ஆன்டோனியோ, “உங்கள் படை உக்ரைனை தாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என ரஷ்ய அதிபர் புதினை கேட்டுக்கொண்டார்.