Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!

மத்திய அமைச்சகங்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் தரவுகளை (Data), தனியார் மற்றும் தனிநபர்களுக்கு விற்பதற்கு ஆலோசித்து வருகிறது மத்திய அரசு. இதற்கான வரைவு அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.

இதன் முக்கியத்துவம் என்ன?

இதைத் தெரிந்துகொள்வதற்கு முன் Personal & Non Personal Data-வைப் பற்றி ஓர் உதாரணத்துடன் பார்த்துவிடுவோம்.

தற்போது நாம் வைத்திருக்கும் வாகனங்களின் பதிவு எண், மாடல், இன்ஷூரன்ஸ், காலாவதி தேதி போன்ற அனைத்து விவரங்களும், நம் பெயர், பாலினம், முகவரி உள்ளிட்ட தகவல்களோடு சேர்ந்து மத்திய அரசின் Vahan தளத்தில் இருக்கும்.

  • இந்த Data-வை வைத்து, ஒவ்வொரு தனிநபரின் வாகன விவரங்களையும் அரசு அறிந்துகொள்ள முடியும். இப்படி ஒரு தனிநபரின் அடையாளத்தோடு அறியப்படுபவை Personal Data. பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற அடையாளங்களோடு சேர்ந்தது இது.

  • இதுவே தனிநபரின் அடையாளம் இன்றி, ஒரு ஊரில் இத்தனைபேர் இந்த மாடல் பைக் வைத்திருக்கிறார்கள், இத்தனைபேர் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருக்கிறார்கள், இத்தனை வாகனங்கள் இருக்கிறார்கள் எனப் பலரின் தகவல்களை சேர்த்து பொதுவாக தொகுத்தால், அது Non Personal Data.

தற்போது இந்த Non Personal Data-வைத்தான் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது அரசு.

எதற்காக இந்த திட்டம்?

மக்கள் தொகை விவரங்கள், ஆதார், பான், வாஹன் எனப் பல தரவுத்தொகுப்புகளை (Data set) தன்வசம் வைத்திருக்கிறது மத்திய அரசு. கொள்கை முடிவுகள் எடுக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் இவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால், முழுமையாகப் பயன்படுத்தப்படுத்திக்கொள்கிறதா என்றால் இல்லை. ஒரு அமைச்சகத்தின் தரவுகளை இன்னொரு அமைச்சகம் பயன்படுத்துவதிலேயே நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

  • இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து, அனைத்து அமைச்சகங்களும் தங்களுக்குள் பொதுவான தரவுகளைப் பகிர்ந்துகொள்ள வழி செய்வது முதல் இலக்கு.

  • இப்படிப்பட்ட தரவுகளை அரசு துறைகளுக்கு மட்டுமன்றி, மாநில அரசுகள், ஆய்வாளர்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு விற்று லாபம் பார்ப்பதும், பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும் முக்கிய இலக்கு.

இதற்காகத்தான், `India Data Accessibility and Use Policy’-ஐ வடிவமைத்திருக்கிறது அரசு.

என்ன சொல்கிறது இந்த வரைவு அறிக்கை?

வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதன்படி,

  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின்கீழ், `India Data Office’ என்ற புதிய துறை உருவாக்கப்படும். இதேபோல அனைத்து அமைச்சகங்களிலும் தனி Data Management Unit-கள் அமைக்கப்பட்டு, அதற்கென Chief Data Officer (CDO)-ரும் நியமிக்கப்படுவார். துறைசார்ந்த Data-வுக்கு இவர்களே பொறுப்பு.

  • அனைத்து அமைச்சகங்களும் வணிகரீதியாக (நிறுவனங்களுக்கு) அல்லது சமூக / பொருளாதாரரீதியாக (அரசுக்கு) மிகவும் உபயோகமுள்ள Data set-களைக் கண்டறிந்து அவற்றை தரம் உயர்த்தி வெளியிடவேண்டும். இதற்கான விலைகளை சம்பந்தப்பட்ட துறைகளே நிர்ணயித்து விற்பனை செய்துகொள்ளலாம்.

  • இந்த டேட்டாவை பிற துறைகளுடன் எளிமையாகப் பகிர்ந்துகொள்வதற்கும், சம்பந்தப்பட்ட துறைகள் ஆவனசெய்யவேண்டும்.

இவைதான் பொதுவான அம்சங்கள். இந்த வரைவு குறித்து பொதுமக்கள் மார்ச் 18-ம் தேதி வரை தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

இதனால் தனியாருக்கு என்னென்ன நன்மை?

மேலே பார்த்த Vahan உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். தற்போதைய இந்த முயற்சிக்கு முன்பாகவே, 2019-ம் ஆண்டு ஆர்.சி புக் மற்றும் லைசென்ஸ் விவரங்கள் கொண்ட தரவுகளை மொத்தமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்றது மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம். வங்கிகள், கார் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் என மொத்தம் 142 நிறுவனங்கள் இந்த டேட்டாவை வாங்கின.

  • இப்படி அரசிடமிருந்து கிடைக்கும் இதுபோன்ற துல்லியமான Data set-கள், இந்திய சந்தையைப் புரிந்துகொள்ளவும், அதற்கேற்ப திட்டங்களை வகுக்கவும் தனியாருக்கு உதவிபுரிகின்றன.

  • தற்போது பல்வேறு துறைகளில் கால்பதித்திருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த Data set-கள் வரப்பிரசாதம். 2025-க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், அதற்கு இந்த தரவுப்பகிர்வு ஊக்கமாக இருக்கும் என அரசு கருதுகிறது. கூடவே, அனைத்து துறைகளுக்கும் வருமானமும் கிடைக்கிறது.

அப்படியெனில் ரொம்ப நல்ல விஷயம்தானே?

நிச்சயமாக, இது வரவேற்கத்தக்க முயற்சிதான். ஆனால், இதில் பிரைவசி சிக்கல்களும் இல்லாமல் இல்லை. உதாரணமாக, Vahan டேட்டாவை 2019 முதல் தனியாருக்கு விற்கத்தொடங்கிய அரசு, ஓராண்டிலேயே அதைக் கைவிட்டது. காரணம், Vahan-ல் Personal Data-வும் இருந்தது. அது மிகப்பெரிய பிரைவசி அச்சுறுத்தலாக மாறியது.

  • இப்படிப்பட்ட பிரைவசி சிக்கல்களை எதிர்கொள்ள, இப்போது இருக்கும் சட்டங்கள் போதாது. நீண்டகாலமாக தயாராகிக்கொண்டிருக்கும் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவும் (Personal Data Protection Bill) இன்னும் சட்டமாகவில்லை. எனவே உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகே, இந்த முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.

  • இதில் விற்பனை செய்யப்படும் தரவுகள், Non Personal Data என்றாலும், அவற்றிலிருந்து Personal Data-ஐப் பெறவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி நடக்கும்பட்சத்தில் அந்த தரவு கசிவுகளை, அரசு எப்படி கையாளும் என்ற கேள்வி எழுகிறது. உதாரணமாக, Vahan டேட்டாவை விற்பனை செய்வதை அரசு நிறுத்தினாலும், ஏற்கெனவே விற்ற 142 நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை தடுக்க எதுவும் செய்யவில்லை.

இதுபோன்ற பிரைவசி பிரச்னைகளைப் பின்தள்ளிவிட்டு, வணிகரீதியான முயற்சியாக மட்டுமே இதை முன்னெடுத்தால், இந்தியர்களின் Data-விற்கு அரசிடமிருந்தே அச்சுறுத்தல் உருவாகும் என்பதுதான் இதிலிருக்கும் சிக்கல். திட்டத்தின் இறுதிவடிவத்தில் இந்த சிக்கலுக்கு தீர்வு இருக்குமா எனப் பார்ப்போம்.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.