தொலைபேசி இல்லாத தற்போதைய வாழ்க்கை கேள்வி குறிதான். ஆடம்பரத் தேவையிலிருந்து அடிப்படைத் தேவையாக மாறிய தொலைபேசியின் ப்ரீபெய்டு கட்டணங்கள் கட்டண உயர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலும் நசுக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான்.
அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் தான், மும்பை நகரில் கூலி வேலை செய்யும் சுபோத் மோண்டல். 24 வயதான இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசுவதெற்கென ஒரு தொலைபேசி இணைப்பை பயன்படுத்தி வந்துள்ளார். நவம்பர் மாதத்தில் மொபைல் ஆபரேட்டர்கள் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, தனக்கு தொலைபேசி இணைப்பே வேண்டாமென தீர்மானித்து, குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள ஃபோன் பூத்களைக் நாடி வருகிறார்.
“தனக்கென ஒரு தொலைபேசி இருந்தபோது தனது மகன் மற்றும் மனைவியுடன் தினமும் பேச முடிந்தது. ஆனால், இப்போது வாரத்திற்கு ஒரு முறைதான் அவர்களுடன் பேசுகிறேன். சமீபத்திய ப்ரீபெய்டு மொபைல் கட்டணங்கள் அதிகரிப்பு தொலைபேசி இணைப்பு வைத்திருப்பதைக் கடினமாக்கியுள்ளது” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள், ப்ரீபெய்டு மொபைல் கட்டணங்களை 20-30% உயர்த்தியதால், கட்டணம் செலுத்த முடியாத லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் மொபைல் எண்களை இழந்தனர் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இதை குறித்து டிராய் வெளியிட்ட தரவுகளின் அடிப்படியில், டிசம்பர் 2021 மாதத்தில் பீகார், ஜம்மு & காஷ்மீர், டெல்லி மற்றும் கேரளா பகுதிகளைத் தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளன. தொலைபேசி இணைப்பை கைவிட்டவர்கள் மத்தியப்பிரதேசத்தில் 20 லட்சம் போனும், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் 10 மில்லியனுக்கும் அதிகரித்துள்ளனர். டிசம்பரில் ஒட்டுமொத்த மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.3 கோடி குறைந்துள்ளது.
இப்படி சந்தாதார்கள் குறைவதற்குக் கட்டண உயர்வு முக்கியமான காரணமாக இருக்கலாம், நவம்பர் மாதம் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வினால் இரண்டு சிம் வைத்திருந்தவர்கள் ஒன்றைக் கைவிட்டனர். இந்தக் கட்டண உயர்வு மொபைல் எண்ணைக் கைவிட்டு விடக்கூடிய கட்டாய சூழலுக்கு மக்களைத் தள்ளியுள்ளது, மேலும், மக்கள் தங்களின் எண்ணை பல அரசாங்கத் திட்டங்களோடு இணைத்துள்ளதால், அரசாங்க விநியோக சேவையும் பாதிக்கப்படலாம் என துறை சார்ந்த தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.