வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 24 வயதுடைய ஜான் என்ற ஹிமாலயன் கரடி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 24 வயதுடைய ஜான் என்ற ஹிமாலயன் கரடி சர்க்கஸிருந்து மீட்கப்பட்டு கடந்த 2004 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போதே கரடிக்கு இரண்டு கண்களிலும் கண்பார்வை குறைபாடு இருந்தது.
இந்நிலையில், ஜான் ஹிமாலயன் கரடி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 7.12.2021 அன்று முதல் உயிரியல் பூங்கா மருத்துவர்களால் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவ்வப்போது கால்நடை பல்கலைக்கழக மருத்துவ குழுவினராலும் பார்வையிடப்பட்டு இரத்த பரிசோதனை மற்றும் இதர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு நாட்களாக அதன் உடல்நிலை மிகவும் மோசமான நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் உயிரியல் பூங்கா மருத்துவமனைக் குழு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்து விட்டது. அதன் பிரேத பரிசோதனை உயிரியல் பூங்கா மருத்துவர்கள் மற்றும் கால்நடை பல்கலைகழக மருத்துவ குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டதாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.