2022-ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜீங்கில் இம்மாதம் 4-ம் தேதி (நாளை) தொடங்கவிருக்கின்றன. இத்தொடரில் இந்தியா சார்பாக போட்டியிடும் ஒரே வீரர் ஆரிஃப் கான். Slalom மற்றும் Giant Slalom ஆகிய இரு பனிச் சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
31 வயது நிரம்பிய ஆரிஃப் காஷ்மீரில் உள்ள குல்மாரை பூர்வீகமாகக் கொண்டவர். தனது நான்காவது வயதிலேயே பனிச் சறுக்கில் ஈடுபடத் தொடங்கிய இவரின் தந்தை பனிச் சறுக்கு உபகரணங்கள் கடை ஒன்றை நடத்தி வருபவர். பனி போர்த்திய மலைகளைச் சுற்றியே ஆரிஃப்பின் இளமை காலம் அமைந்ததால் பனிச் சறுக்கு அவருக்கு இயல்பிலேயே கைகூடியது.
தன் தந்தை யாசீன் கானின் உதவியுடன் அவ்விளையாட்டின் நுணுக்கங்களை மிக சீக்கிரத்தில் கற்றுதேர்ந்த ஆரிஃப் தன் 12-வது வயதில் தேசிய போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். மேலும் தன் அடுத்தகட்ட பயிற்சிகளை ஐரோப்பாவில் தொடர்ந்த அவர் ஆசிய போட்டிகள், உலக தொடர்கள் என இதுவரை 127 சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
TOPS திட்டத்தின் கீழ் (Target Olympic Podium Scheme) இந்திய விளையாட்டு துறை ஆரிஃப் கானை சமீபத்தில்தான் சேர்த்து கொண்டது. இதன் மூலம் தன் பயிற்சிக்கான 17 லட்சத்திற்கும் அதிகமாக தொகையை அரசிடம் இருந்து உதவியாய் பெற்றார். இத்தொகை கிடைப்பதற்கு முன்னர் Crowd Funding மூலமே தன் பயிற்சிக்கான தொகையை ஈட்டினார் ஆரிஃப்.
துபாயில் சமீபத்தில் நடந்த தகுதி சுற்றுகள் மூலம் இந்த வருட குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வானர் ஆரிஃப். மேலும் குளிர்காலப் போட்டிகளில் இரண்டு பிரிவுகளில் கலந்துக்கொள்ளும் முதல் இந்தியர் இவரே.
தன் நீண்ட நாள் கனவு நனவாகப்போவது பற்றி ஆரிஃப் கூறுகையில், “கடந்த ஓர் ஆண்டாக நான் எடுத்துக்கொண்ட பயிற்சி எனக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டுமென்றால் குறைந்தபட்சம் பத்து ஆண்டு காலத்திற்கு கடின உழைப்பும் அதற்கான பயிற்சி தொகையும் மிக அவசியம். என்னை பொறுத்தவரையில் டாப்-30-குள் வந்துவிட்டாலே நான் பதக்கம் வென்றதற்கு சமம். ஏனென்றால் மலையின் உச்சியிலிருந்து கீழ் வரும் போது நாம் செய்யும் மிக சிறிய தவறே நம்மை போட்டியில் இருந்து வெளியேற்றிவிடும். என்னுடைய இந்த பங்கேற்பு எதிர்கால குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க பலரையும் ஊக்குவிக்கும்“ என்று கூறினார்.