விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் விஜயகுலத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான சோலை பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலையில் வழக்கம்போல் பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி, அவரின் உறவினர் செந்தில்குமார் ஆகியோர் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது.
அத்துடன், வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் காயம் அடைந்தனர். வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூரில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, கட்டட இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கோவில்பட்டி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் செந்தில்குமார், கருப்பசாமி ஆகிய இருவர் உயிரிழந்தனர். சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரில் காசி என மொத்தம், 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1-ம் தேதி களத்தூர் அருகிலுள்ள நாகலாபுரத்தில் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வழிவிடு முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பிற்காக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 6 அறைகள் இடிந்து தரைமட்டமானது.
அதில், 4 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர். புத்தாண்டு நாளில் நடந்த இந்த வெடி விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்த 3 நாளில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்த சம்பவம் பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.