மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில் பாலஸ்தாபனம் இன்று காலை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் கலந்து கொண்டு திருப்பணியைத் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ அபயாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது திருவாவடுதுறை ஆதீன பரிபாலனத்திலுள்ள இக்கோயில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்துப் பேறு பெற்ற தலமாகும். இத்தகைய சிறப்பு பெற்ற மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலின் திருப்பணிகள் இன்று (21..11.20021) தொடங்கப்பட்டன.
அதனை முன்னிட்டு இன்று காலை கோயிலுக்கு வந்த திருவாவடுதுறை ஆதீனம் 24 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் கோ பூஜை, கஜ பூஜை செய்து வைத்தார் தொடர்ந்து அவரது முன்னிலையில் கோயில் கொடிமரத்து மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் மங்கல வாத்தியம் முழங்கக் கோயிலை வலம் வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது.
பாலஸ்தாபனத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனையடுத்து கோயிலின் ஈசானிய மூலையில் திருப்பணிக்கான பூஜைகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டினார்.
இதில் திருவாவடுதுறை ஆதீன அம்பலவாணர் தம்பிரான், அருணாச்சல தம்பிரான், வேலப்ப தம்பிரான், ராமலிங்க சுவாமிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா முருகன், வக்கீல் ராஜேந்திரன், டாக்டர்கள் ராஜசேகர், செல்வம், கோமல் சேகர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர் பாலஸ்தாபன பூஜைகளை சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமி நாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் ஓதி பாலஸ்தாபனத்தை செய்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் மேலாளர் திருமாறன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.