மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று மாரடைப்பால் காலமானார்.
மாரடைப்புக் காரணமாக பெங்களுருவில் உள்ள தனியார் மத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு பல துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவரது ட்விட்டர் பக்கத்தில், ”புனித் ராஜ்குமார் சீக்கிரம் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கண்ணீர் இரங்கல். ஒட்டுமொத்த கன்னட, இந்தியத் திரையுலகத்திற்கே பெரும் இழப்பு. இந்த துயரமான இழப்பைச் சமாளிக்க அனைவருக்கும் வலிமை வேண்டும்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் நாசர், “புனீத்…
என் மனதும் அறிவும்
நம்ப மறுக்கிறது…
உன் முகத்தில் எக்கணமும்
நிலைத்து நிற்கும் அகன்ற சிரிப்பு
எப்படி உறைந்து போனது
நான் உணர மறுக்கிறேன்
நீ எமைவிட்டு போனாய் என்று.
புனீத்…. புனீத்…. பூனீத்
” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில், “புனித் என் நண்பன். மிகவும் மனவேதனை அளிக்கிறது. நிம்மதியாக இருங்கள் நண்பரே. நீங்கள் ஒரு சிறந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்: ”நம்ப முடியவில்லை. சீக்கிரம் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக என் இதய அஞ்சலிகள்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ”மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகனும் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது. எங்கள் இரு குடும்பங்களும் பல தசாப்தங்களாக நல்லுறவைப் பகிர்ந்து கொள்கின்றன. இதனால் எனக்கு தனிப்பட்ட இழப்பு. புனித் நடிகராக இருந்தபோதிலும் அவர் ஒரு தாழ்மையான மனிதராகவே இருந்தார்.
கலைஞரின் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக எங்கள் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற புனித்தின் அன்பான செயல் இன்னும் என் இதயத்தில் உள்ளது. கன்னட திரையுலகம் அதன் மிகச்சிறந்த சமகால சின்னங்களில் ஒன்றை இழந்துவிட்டது. இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் துயருற்றிருக்கும் புனித் குடும்பத்தினருக்கும், கர்நாடக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உருக்கமுடன் கூறியிருக்கிறார்.