பட்டினம்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ரேவதி (27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகிலன். இவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவருகிறார். ரேவதியுடன் முகிலனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ரேவதி, தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாகப் பட்டினம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் ரேவதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேவதியின் மரணத்துக்குத் தலைமைக் காவலர் முகிலன்தான் காரணம் என ரேவதி உறவினர்கள் குற்றம் சாட்டினர். அதன்பேரில் தலைமைக் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ரேவதியின் கணவர் கபில்தேவ் என்பவர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “எனக்கும் என் மனைவி ரேவதிக்கும் கடந்த 8.4.2010-ம் தேதி திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நாங்கள் ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்தோம். அதைப் பயன்படுத்தி என் மனைவியிடம் ஆசைவார்த்தைகளைக்கூறி அவரின் மனதை மாற்றிய முகிலன் என்பவர் தனியாக வீடு எடுத்து என் மனைவியுடன் தங்கி வந்தார்.
Also Read: திருமணம் தாண்டிய உறவு; சிக்கன் கிரேவியில் விஷம்! – குழந்தையுடன் தற்கொலை செய்த தாய்
கடந்த 23-ம் தேதி இரவு 10 மணியளவில் என்னுடைய சித்தப்பா, எனக்கு போன் செய்து அவசரமாக ரேவதி தங்கியிருந்த வீட்டுக்கு வரச் சொன்னார். உடனடியாக நான் சென்று பார்த்தபோது என் மனைவி கழுத்தில் புடவையின் பாதி இறுக்கி இருந்தது. மறுபாதி மின்விசிறியில் இருந்தது. வீட்டுக்குள் முகிலன் மதுபோதையில் இருந்தார். வீட்டுக்குள் சில மதுபாட்டில்கள் உடைந்த நிலையில் சிதறிக் கிடந்தன. நான் என் மனைவியின் அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்துகிடந்தார். அவருடன் வீட்டில் முகிலன் மட்டும் தனியாக இருந்தார். அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது ஊர் பொதுமக்கள் அவரைப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். என் மனைவியின் இறப்பிற்குக் காரணமானவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என் மனைவியின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நெடுமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கத்தில் பணியாற்றிய ஏட்டு ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது இன்னொரு ஏட்டு ஒருவர் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.