‘மெட்டி ஒலி’ சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் உமா மகேஸ்வரி. 40 வயதான உமா சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்துவந்தார். உடல்நலக்குறைவால் பல மாதங்களாக உயிருக்குப் போராடிவந்த உமா இன்று காலை மரணமடைந்தார்.
‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ போன்ற சீரியல்களிலும், ‘ஈ பார்கவி நிலையம்’ என்கிற மலையாளப் படத்தின் ஹீரோயினாகவும் உமா நடித்திருக்கிறார். 13 வருடங்கள் மீடியாவில் பயணித்தவர், திருமணத்திற்கு பிறகு மீடியாவிலிருந்து விலகியிருந்தார்.
பல நாட்களாக உடல் நலம் சார்ந்த பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார் உமா. இவருடைய கணவர் கால்நடை மருத்துவர். உடல் நலக் குறைவு ஏற்பட்டவுடன், ஈரோட்டிற்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அங்கேயே இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், எந்த சிகிச்சையும் பலனளிக்காத நிலையில் இன்று அவர் மரணம் அடைந்திருக்கிறார். அவரது உடல் இன்று சென்னை கொண்டுவரப்படுகிறது.
உமா குறித்து நடிகை அம்முவிடம் பேசினோம். ”உமாவை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். எப்பவுமே அவளோட சோகத்தை யார்கிட்டேயும் பகிர்ந்துக்க மாட்டா. ரொம்ப பாசிட்டிவான நபர். அவளுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டோம். அவகிட்ட கடைசியா பேசும்போது கூட வீட்டுக்கு வாங்கன்னு சொன்னா. சரி, உடல்நலம் சரியில்லாதவங்களை தொடர்ந்து போன் பண்ணி பேசி தொந்தரவு பண்ண வேண்டாம்னு விட்டுட்டோம். எப்பவும் கலகலன்னு இருக்கிறவ திடீர்னு அமைதியாகிட்டா. அவளுக்கு சாகுற வயசாங்க? எங்களால் அவளுடைய இழப்பை ஏற்றுக்கவே முடியலை” என்றார்.