போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எதிர்காலத்தில் இதுபோன்ற காரியத்தில் அவர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காக போதைப்பொருள் தடுப்பு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே மற்றும் சமூக சேவகர்கள் சிறையில் ஆர்யனுக்கும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்தனர். கவுன்சிலிங்கின்போது சிறையில் இருந்து வெளியில் சென்றதும் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுவேன் என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இனி நடந்து கொள்ள மாட்டேன் என்றும், தவறான வழியைக் கைவிடுவேன் என்று ஆர்யன் தெரிவித்திருக்கிறார். அதோடு நீங்கள் என்னை நினைத்து பெருமைப்படும் வகையில் எதாவது செய்வேன் என்றும் ஆர்யன் தெரிவித்துள்ளார். சிறையில் இருக்கும் ஆர்யனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது குறித்து வரும் 20-ம் தேதி தெரிய வரும். ஆர்யன் சிறையில் இருந்து தனது பெற்றோருடன் போனில் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டார்.
Also Read: ஆர்யன் கான் கைது: `அதிகாரிமீது குற்றம்சாட்டிய அமைச்சருக்குக் கொலை மிரட்டல்!’ – பாதுகாப்பு அதிகரிப்பு
அவர் தனது பெற்றோருடன் பேசிய போது அழுதுவிட்டதாக அருகில் இருந்த சிறை அதிகாரி தெரிவித்தார். ஷாருக்கான் தனது மகனை அழவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பையில் பல்வேறு பகுதியில் அதிரடி ரெய்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். வசாய், நாலாசோபாரா போன்ற இடங்களில் ரெய்டு நடத்தி இவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மொகமத் ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போதைப்பொருளைத் தனக்கு ஆப்பிரிக்க பிரஜை ஒருவர் கொடுத்ததாக மொகமத் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து போதைப்பொருட்களை சப்ளை செய்த ஆப்பிரிக்க பிரஜையை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.