உடலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக வேட்டைத் திறன் குறைந்த டி-23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று 2 மாதங்களுக்கு முன்பு முதுமலை காட்டைவிட்டு வெளியேறி கூடலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்தது. கடந்த 2 மாதங்களில் 20-க்கும் அதிகமான கால்நடைகளை தாக்கிய அந்தப் புலி, கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தேவன் எஸ்டேட்டைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரை தாக்கிக் கொன்றது. புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூர் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். புலியைப் பிடிப்பதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வந்தனர்.
கூடலூரில் தேடுதல் பணியின்போது தேயிலைத் தோட்டத்தில் இரண்டு முறை அந்த புலி தென்பட்டும், கால்நடை மருத்துவர்களால் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்த முடியாமல்போனது. தொடர்ந்து அந்தப் புலியைத் தேடி வந்த நிலையில், மசனகுடிக்கு இடம் பெயர்ந்த அந்தப் புலி, மசனகுடியில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த மாதவன் என்பவரைத் தாக்கிக் கொன்றது. மேலும், அவரது உடல் பாகங்களையும் தின்றது.
மனிதர்களை உண்ணும் இந்தப் புலியை சுட்டுக் கொல்ல வலியுறுத்தி மசனகுடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் அழுத்தம் காரணமாக அந்தப் புலியை சுட்டுக்கொல்ல வாய்மொழி உத்தரவு ஒன்றை வனத்துறை பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சூழலியல் செயற்பாட்டாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததாதால்,புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கவே முழு முயற்சியில் களமிறங்கினர்.
Also Read: ` T23′ புலி தாக்கி மேலும் ஒருவர் பலி; அச்சத்தில் மக்கள்; வனத்துறை சுட்டுப்பிடிக்க உத்தரவு
3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள், நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், 3 கால்நடை மருத்துவர்கள், பரண்கள், சிறப்பு அதிரடிப் படையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், கேரள, கர்நாடக வனத்துறை எனப் பெரும் பட்டாளமே 17-வது நாளாக அந்தப் புலியைத் தேடி வரும் நிலையில், தற்போது வரை அந்த புலியின் கால் தடத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாத சூழலே நிலவி வருகிறது.
புலி தேடுதல் வேட்டை குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், “முதுமலையில் உள்ள சீகூர் மற்றும் மாயார் பகுதியில் டி-23 புலியின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகித்து கண்காணித்து வந்தோம். ஆனால், ஒரு கண்காணிப்பு கேமராவில் கூட புலி பதிவாகவில்லை. அதன் கால்தடத்தைக்கூட தற்போது வரை எங்களால் கண்டறிய முடியவில்லை.
டி-23 எங்கு மாயமானதோ தெரியவில்லை. எங்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், அந்தப் புலி மீண்டும் ஒரு மனிதரைத் தற்போது வரை தாக்கவில்லை என்பதுதான். தொழில்நுட்ப உதவியுடன் புலியைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்”என்றார்.