நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் (23) சனிக்கிழமை இரவு மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டார். இந்த பார்ட்டியில் கோகைன், சரஸ், எம்.டி எனப்படும் போதைப்பொருள் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டது. கப்பலில் சாதாரண உடையில் ஏறிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 20 பேர் பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போதைப்பொருள் வைத்திருந்த நடிகர் அர்பாஸ் மெர்சண்ட் மற்றும் போதைப்பொருள் உட்கொண்ட 8 பேர் பிடித்து செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆர்யன் கான் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் ஷிண்டே, கப்பலில் நடந்த பார்ட்டிக்கு ஆர்யனை ஒரு விருந்தினராகத்தான் அழைத்திருந்தனர். அவரிடம் எந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. போதைப்பொருள் உட்கொண்டதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் ஜாமீனில் வெளியிடக்கூடியதுதான் என்று வாதிட்டார். ஆனால் ஆர்யன் கான் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்திருப்பதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் ஆர்யன் கான்

Also Read: சுஷாந்த் மரண வழக்கு… போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு! – 3ம் நாள் விசாரணையில் ரியா கைது

இதையடுத்து அனைவருக்கும் ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் அவர்களை தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து இந்த ரகசிய ஆபரேசனுக்கு தலைமை தாங்கிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே கூறுகையில், “ஒரு வாரத்திற்கு முன்பு எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலில் மும்பையில் இருந்து கோவா செல்லும் கப்பலில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் போதைப்பொருளுடன் கலந்து கொள்வதாகவும் தகவல் கிடைத்தது. உடனே நாங்கள் 22 பேர் அந்த கப்பலில் சாதாரண உடையில் ஏறினோம். நாங்கள் அனைவரும் முககவசம் அணிந்திருந்ததால் எங்களை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. கப்பல் கிளம்பிய சிறிது நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். அதனை தொடர்ந்து ரெய்டு நடத்தி 13 கிராம் கொகைன், 21 கிராம் சரஸ் மற்றும் எம்.டி பார்ட்டி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகர் அர்பாஸ் தனது ஷூவிற்குள் சரஸ் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தார். அதனை எடுத்த போது அருகில் ஆர்யான் கானும் உடனிருந்தார். ஆர்யன் கானிடம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால் ஆர்யன் கான் அளித்த வாக்குமூலத்தில் நடிகர் அர்பாஸிடம் பிடிபட்ட போதைப்பொருளை இருவரும் பயன்படுத்தத்தான் வைத்திருந்தோம் என்று தெரிவித்துள்ளார்” என்றார்.

கப்பலில் நடிகர் மகன் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதற்குள்தான் பார்ட்டி நடத்தப்பட்டது. இன்று அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றனர். அவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று மாலைக்குள் தெரிய வரும். ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்டவுடன் நடிகர் சல்மான்கான் ஞயிற்றுக்கிழமை ஷாருக்கான் வீட்டிற்கு சென்று வந்தார். மற்றொருபுறம் குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை மறைக்கவே இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.