மயிலாடுதுறையில் பார் ஏலம் எடுத்துத் தருவதாக ரூ.3 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.ஸ்ரீதர் என்பவர் மீது திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி என்பவர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சுகுணாசிங்கிடம் புகார் மனு அளித்துள்ளார்.
Also Read: திருவாரூர்: அதிகரித்த லஞ்சப் புகார்! – ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குக் குறிவைத்த லஞ்ச ஒழிப்புத்துறை
அந்த மனுவில், “திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவரான ஆர்.எஸ்.ஸ்ரீதர், மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் பார் ஏலத்துக்கு வருவதாகவும், அதனை சாந்திக்கு ஏலம் எடுத்துத்தர ரூ.3 லட்சம் கேட்டதாகவும், அதன்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி ஸ்ரீதரின் உதவியாளர் செந்தில் என்பவர் மயிலாடுதுறை அருகே மணல்மேடு நடுத்திட்டு கிராமத்திலுள்ள தனது வீட்டில் வந்து வாங்கிச் சென்றதாகவும், இதுகுறித்து பலமுறை தொடர்ந்து கேட்ட பிறகு கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி பணத்தைத் திருப்பித்தர முடியாது என்று ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, தி.மு.க. மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரிடம் முறையிட்டும் பலன் கிடைக்காததால் காவல்துறையினரை அணுகியுள்ள சாந்தி, கட்சித் தலைமை தலையிட்டு தீர்வு பெற்றுத்தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். டாஸ்மாக் மதுபானக்கடையில் பார் வைக்க தற்போது அனுமதி வழங்கப்படாத நிலையில், டாஸ்மாக் பார் நடத்த தி.மு.க.வைச் சேர்ந்த பெண் தி.மு.க. பிரமுகரிடமே பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி மயிலாடுதுறை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் விசாரித்தபோது ” இப்புகார் குறித்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.