கொரோனா லாக்டெளனால் நீண்டு கொண்ட போன ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலீஸை தீபாவளி என இறுதி செய்து முதல் பாடலையும் வெளியிட்டுவிட்டது இயக்குநர் சிவா அண்ட் சன் பிக்சர்ஸ் டீம். இமான் இசையில், எஸ்.பி.பி குரலில் ‘’அண்ணாத்த… அண்ணாத்த… வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு’’ என ஒலிக்கும் இந்தப் பாடலை எழுதியிருப்பவர் விவேகா.
இந்தப் பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘’45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்த’ படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்’’ என்று நெகிழ்வுடன் தன் நன்றியைப் பதிவுசெய்திருக்கிறார்.
பாடல் எழுதிய அனுபவம் குறித்து விவேகாவிடம் கேட்டேன். ‘’பாடல் முழுமையாக உருவானவுடன் ரஜினி சார் முதலில் கேட்டிருக்கிறார். ‘பாடல்வரிகளும், அதை மறைந்த எஸ்.பி.பி அவர்கள் பாடிய தோரணையும், துள்ளலும், கம்பீரமும் எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. படையப்பாவுக்குப் பிறகு எனக்கு பிடித்த பாடல் இது தான்’ என ரஜினி சார் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். இதை என்னிடம் இயக்குநர் சிவா சொன்னபோது மகிழ்ந்தேன். எனக்கு தீபாவளி இப்போதே வந்துவிட்டது மாதிரி தெரிகிறது.
‘’உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இரங்கும் குணமல்லவா?
உயர்தர வீரம் எது சொல்லவா
சுயதவறுணரும் செயலல்லவா?’’
என்கிற இந்த வரிகளைப் பாடிவிட்டு ‘அற்புதமாக இருக்கிறது’ என எஸ்.பி.பி சார் என் தோளைத்தட்டி பாராட்டினார். சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் என் நன்றி’’ என்றார் விவேகா.