கொடநாட்டில் கொலை கொள்ளை சம்பவம் நடந்த அன்று சி.சி.டி.வி கேமிராக்கள் ஏன் இயங்கவில்லை என்பது இன்றளவும் விலகாத மர்மமாகவே இருந்து வருகிறது.கொடநாடு பங்களாவுக்குள் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து தற்போதைய கூடுதல் விசாரணையில் தனிப்படை போலீஸார் தூசிதட்டி வருகின்றனர்.
Also Read: கொடநாடு:`புலன் விசாரணையை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்த வேண்டும்’-எதிர்த்தரப்பு கேட்பதன் பின்னணி?!
கொடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிவந்த தினேஷ்குமார் என்ற இளைஞர்,கொடநாடு சம்பவம் நடந்த 2 மாதங்களில் செய்துக் கொண்டார்.வழக்கு விசாரணை நடந்துக் கொண்டிருந்த போதே, இவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், இது சாதாரண தற்கொலை வழக்காகவே சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்றுவரும் கூடுதல் விசாரணையில், தினேஷ்குமார் தற்கொலை வழக்கை மறு விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டனர். இதுகுறித்து கோத்தகிரி தாசில்தாரிடம் அனுமதி கேட்டு தனிப்படை போலீசஸார் மனு அளித்திருந்தனர். இதற்கிடையில் நேற்று மாலை தினேஷ்குமாரின் தந்தை போஜனிடம் அவரது வீட்டில் வைத்தே சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் தினேஷ்குமாரின் சகோதரி ராதிகாவையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரி ஒருவர்,”இவர்கள் இருவரும் பல்வேறு தகவல்களை அளித்துள்ளனர்.கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிப்பதன் மூலம் வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கனகராஜின் விபத்து வழக்கையும் மறு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்”என்றார்.