சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரிஹானா பேகம் (18). இவருக்கு 45 நாள்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவரின் வீட்டுக்கு வந்த சாம்பிராணி பூஜை போடும் நபர் ஒருவர் , `உன்னுடைய கணவருக்கு தோஷம் இருக்கிறது. அதனால் இன்று வீட்டுக்கு வரமாட்டார். வீட்டுக்கு வந்தால் ரத்த காயங்களுடன்தான் வருவார்’ என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்டு இளம்பெண் ரிஹானா பேகம் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து பரிகாரம் ஒன்று செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியவர், உன்னுடைய தாலியை கழற்றி கொடு, சில பூஜைகள் செய்ய வேண்டும். அதற்கு 300 ரூபாய் செலவாகும் ரிஹானா பேகத்திடம் தெரிவித்தார். அதை உண்மையென நம்பிய ரிஹானா பேகமும் கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றிக் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக் கொண்ட அவர், மண் குவளையில் தாலியை போட்டார். பின்னர் அதற்கு மந்திரங்களை ஓதினார். சாம்பிராணி புகையையும் போட்டார். மண் குவளையை மூடி ரிஹானா பேகத்திடம் கொடுத்தவர், ஒரு மணி நேரத்துக்குப்பிறகு இதை திறந்துப் பார் என்று கூறினார். பின்னர் பரிகார பூஜைக்காக 300 ரூபாயையும் வாங்கிக் கொண்டு அவர் சென்று விட்டார்.
ஒரு மணி நேரத்துக்குப்பிறகு மண் குவளையை ரிஹானா பேகம் திறந்துப்பார்த்தார் அப்போது மண் குவளைக்குள் கயிறுகள், பேப்பர்கள் எலும்மிச்சை பழங்கள் இருந்தன. ஆனால் தாலியைக் காணவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை ரிஹானா பேகம் உணர்ந்தார். இதையடுத்து ரிஹானா பேகம், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
Also Read: திருத்தணி: அமாவாசை பூஜை; புதையலுக்காகக் குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்ற பெண் மந்திரவாதி
அதன்பேரில் போலீஸார் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ரிஹானா கூறியதைப் போல ஒருவர் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. தெருவில் நடந்துச் செல்லும் அந்த நபர் ரிஹானா பேகத்தின் வீட்டு வாசலுக்கு சென்று அவரிடம் பேசும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. பரிகார பூஜைகளை செய்து விட்டு அவர் நடந்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்அடிப்படையில் போலீஸார் மர்மநபரை தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.