பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி திருச்சி தனியார் ஹோட்டலில் மாநில நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் அபாயகரமாக மாறிவருகிறது. இதனை நான் சொல்லவில்லை மக்களே சொல்கிறார்கள். அண்ணா பிறந்தநாளில் சிறையில் உள்ள குற்றவாளிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 700 பேரை தி.மு.க விடுதலை செய்ய உள்ளது. இந்த அபாயகரமான முடிவுவை பா.ஜ.க கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ குறித்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டதுடன், இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை என்றாலும், வேண்டுமென்றே தி.மு.க, முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற கருத்துக்களைப் பரப்பி வருகிறது.
அதே போன்று மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இது மக்களுக்கு எதிரானது என்று மிகைப்படுத்துகின்றன. கடந்த நான்கு மாதங்களாக திமுக நிலையான மனநிலையில் இல்லை. மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையே செயல்படுத்தி வருகின்றார்கள்.
Also Read: `எடப்பாடி பக்கம் திரும்பும்`வாளையார்’ மனோஜ் முதல் சசிகலாவின் சமாதான முயற்சி வரை’- கழுகார் அப்டேட்ஸ்!
மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தமிழகத்திற்கு அளித்தாலும் தி.மு.க அரசு, மோடி அரசுக்கும், மத்திய அரசுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நேர்மறை எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. மத்திய அரசு மற்றும் பா.ஜ.க 100 சதவீதம் மாநில அரசுகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
ஆனால் வேண்டுமென்றே மக்களிடம் மத்திய அரசு மீது எதிர்ப்பை உண்டாக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடும். கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும். எங்களது கட்சியைப் பலப்படுத்தத் தமிழகம் முழுவதும் முயற்சியில் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “2020ல் சுமார் 400 தமிழ் மாணவர்கள் பயன் பெற்றார்கள். நீட்தேர்வை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க இதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.
நீட் மசோதாவிற்கு பா.ஜ.க ஆதரவு அளிக்காமல் வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்கு, “அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் தனித்தனி கட்சிகள். நாங்கள் தனிக்கட்சி. அவர்களோடு கூட்டணியில் இருக்கிறோம். தமிழ் மக்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம். மக்கள் எங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு சில அரசியல் கட்சிகள் நாங்கள் கொண்டுவரும் திட்டங்களை வேண்டுமென்றே திசைதிருப்பி நாட்டுக்கு நல்லது செய்யவிடாமல் தடுக்கின்றன. அவர்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்” என்று பதிலளித்தார்.