தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கம்பம், போடி உள்ளிட்டப் பகுதிகளில் வெங்காயம் அதிகமாக பயிரிடப்படுகிறது. குறிப்பாக தேனி பள்ளப்பட்டி, அய்யனார்புரம், கொடுவிலார்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், நாகலாபுரம், வெங்கடாசலபுரம், தாடிச்சேரி, வயல்பட்டி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய பகுதிகள் வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
கொரோனாவின் தொடக்கக் காலத்தில் மழையின்றி வெங்காய விளைச்சல் பாதித்தது. அதனைத்தொடர்ந்து நல்ல மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் அதிகரித்தது. இருப்பினும் போதிய விலை கிடைக்காமல் தற்போது விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
Also Read: “கோவை விதை சான்றளிப்பு இயக்குநரகத்தை இடம் மாற்றக் கூடாது!” – எதிர்க்கும் விவசாயிகள்; என்ன காரணம்?
இதுகுறித்து தமிழக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் சீனிராஜிடம் பேசினோம். “தேனி மாவட்டத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் வெங்காயம் பயிரிடப்படுவதாகவும், தேனி ஒன்றியத்தில் மட்டும் 50 ஏக்கரில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. இதில் சுமார் 5,000 டன் வரை விளைச்சல் கிடைக்கும். ஆனால், தற்போது, விளைவிக்கும் பொருளை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.
ஒரு ஏக்கரில் வெங்காயம் பயிரிட ரூ.30,000-க்கு விதைக்காய்கள் வாங்கி உழவு செய்து, பாத்தி கட்டி, நாற்று நட்டு, களை எடுத்து, மருத்து தெளிக்க மற்றும் தண்ணீர் பாய்ச்ச என மொத்தம் ரூ.50,000-க்கும் மேல் செலவாகிறது. மேலும் வெங்காயம் விளைந்தவுடன் எடுப்புக்கூலி, சாக்கு வாடகை, வண்டிவாடைகை என செலவு செய்து சந்தைக்கு அனுப்பினால் ரூ.8 முதல் ரூ.15 வரை மட்டுமே விலை கிடைக்கிறது.
போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் அறுவடை செய்யாமலேயே விட்டுவிடுகின்றனர். கிலோவுக்கு ரூ.30 கிடைத்தால்தான் விவசாயிகளால் சமாளிக்க முடியும். எனவே தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வது போல வெங்காயத்தையும் கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அதேபோல தமிழக தோட்டக்கலைத்துறை மூலம் மானியத்தில் வழங்கப்படும் சேமிப்பு கிடங்கு வசதியை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.