நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான அருள், அவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறனர்.

அருள்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள். இவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்துகொண்டே விவசாயம் மற்றும் ஜல்லிக்கட்டு, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னெடுத்து போராட்டம் நடத்தி வந்தார். மேலும் பல நலத்திட்ட உதவிகளையும் செய்துவந்தார். இரண்டு முறை குன்னம் தொகுதியில் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் மூலமாகக் களம் கண்டு தோல்வியுற்றார். மேலும், இவரின் மனைவி தமிழரசி ஓலைப்பாடி ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவுகள் பூட்டியே இருந்திருக்கிறது. எப்போது காலையில் நடைப் பயிற்சிக்காகவும் செய்தித்தாள்கள் வாங்குவதற்காக வெளியே வருவார் அருள். ஆனால் வெகு நேரமாகியும் அவரின் வீட்டின் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது துண்டுடன் இறந்த நிலையில் சுவரில் சாய்ந்து கிடந்தார்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்

இவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலையா? யாராவது முன்விரோதத்தில் கொலை செய்துவிட்டார்களா? என்கிற பல கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம். “அருள் இல்லாதப்பட்டவர்களுக்கும் சட்டம் மூலமாகப் பல உதவிகளைச் செய்தவர். திமுக, அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு மற்றும் முக்கிய நிர்வாகிகள் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்டுப் பல போராட்டங்களை நடத்தினார். அவரின் இறப்பில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது.

உயிரிழந்த அருள்

அவரது உடலை முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். அதுவும் பெரம்பலூரில் செய்யக்கூடாது வெளிமாவட்டத்தில் தான் செய்யவேண்டும். அப்படி இல்லையென்றால் கண்டிப்பாகப் போராட்டம் நடத்துவோம் என்று போலீஸாரிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றோம். அவரின் இறப்பு குறித்து முழுமையாகத் தெரியும் வரை விடப்போவதில்லை” என்றார்கள் காட்டமாக.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் பிரேத பரிசோதனை வந்த பிறகுதான் அருள் எப்படி இருந்தார் என்பது தெரிய வரும்.

Also Read: “நாம் தமிழர் சுவரொட்டியைத் தடுக்கவே ‘சிங்கார சென்னை’த் திட்டம்!” – சீமான் சொல்லும் விளக்கம்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.