நான்கு வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் வந்துவிட்டார். இந்த முறை ‘நாய் சேகர்’ என்ற டைட்டிலுடன் மறுபிரவேசம் நடப்பது உறுதியாகி இருந்தது. ஆனால், அந்தத் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் வைத்திருக்க தொடங்கியது டைட்டில் பஞ்சாயத்து!
‘நாய் சேகர்’ என்ற தலைப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் காமெடி நடிகர் சதீஷ் நடிக்க ஒரு திரைப்படத்தை தயாரித்துவருகிறது. பாதிக்கும் மேல் இப்படத்தின் படிப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில்தான் வடிவேலு – சுராஜ் கூட்டணி ‘நாய் சேகர்’ என்ற தலைப்பில் படம் எடுப்பதாக அறிவித்தது. ஏற்கெனவே இந்த டைட்டிலில் மற்றொரு நிறுவனம் படம் தயாரித்துக்கொண்டிருக்கிறதே என செய்தியாளர் சந்திப்பில் வடிவேலுவிடம் கேட்டபோது, அதற்கான பதிலை இயக்குநர் சுராஜ் சொன்னார். ”நாய் சேகர் என்றாலே வடிவேலுதான் நினைவுக்கு வருவார். அதனால் எப்படியும் அந்த நிறுவனம் நாய் சேகர் டைட்டிலை வடிவேலுவுக்கு விட்டுத்தருவார்கள்” என்றார். இதுதொடர்பாக என்ன நடக்கிறது என சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம்.
”லைகா நிறுவனம் ஏஜிஎஸ் உடன் பேசிப்பார்க்க எந்த பதிலும் சொல்லாமல் முதலில் அமைதி காத்தார்கள். இதனால் வடிவேலுவே நேரடியாகப் பேசத் தயாரானர்.ஆனால், ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரமோ ‘இப்போது பட தயாரிப்பை எல்லாம் என் மகள்தான் பார்த்துக்கொள்கிறார். அதனால் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை’ என்று சொல்லியிருக்கிறார். அவரது மகளோ ‘இந்த விவகாரத்தில் முடிவெடுத்து தலைப்பைக் கொடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை’ என்று சொல்லியிருக்கிரார். ஆனால், ‘நாய் சேகர்’ என்ற தலைப்பு எப்படியும் கிடைத்துவிடும் என்று காத்திருக்கிறார் வடிவேலு.
ஏஜிஎஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “இந்தத் தலைப்பை ஒருபோதும் வடிவேலுக்கு தருவதாக இல்லை. வீணாக அவர் நம்பிக்கொண்டிருக்கார். ‘நாய் சேகர்’ தலைப்பில் படத்தை வெளியிடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்கள்.
ஆக வைகைப்புயலின் அடுத்த படத்தின் பெயர் ‘நாய் சேகர்’ இல்லை!